வெலிகடை சிறையில் இருந்த இரண்டு கைதிகளை காணவில்லை
சிறைச்சாலை அதிகாரிகளின் வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த வெலிகடை சிறைச்சாலையின் இரண்டு கைதிகள் கடந்த 19 ஆம் திகதி தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதிகளின் பட்டியலை சரி பார்த்த போது கைதிகள் இருக்கவில்லை
எப்பாவல தம்புத்தேகம மற்றும் அனுராதபுரம் கல்குளம பிரதேசத்தை சேர்ந்த கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள் இரவு கைதிகளின் பெயர் பட்டியலை சரி பார்த்த சந்தர்ப்பத்தில் இந்த கைதிகள் சிறையில் இருக்கவில்லை.
இதனையடுத்து அதிகாரிகள் தேடிப்பார்த்த போது, அந்த கைதிகள் சிறைச்சாலை வளாகத்திற்குள் இருக்கவில்லை என தெரியவந்துள்ளது.
தப்பியோடிய கைதிகள் வீடுகளிலும் இல்லை
தப்பிச் சென்ற கைதிகளின் முகவரியில் உள்ள வீடுகளில் தேடுதல் நடத்திய போதிலும் அவர்கள் வீடுகளுக்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது.
தப்பிச் சென்ற கைதிகள் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் தெரியவரவில்லை என்பதுடன் நேற்றிரவு வரை சிறைச்சாலை திணைக்களம் பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் அது சம்பந்தமாக முறைப்பாடும் செய்திருக்கவில்லை என தெரியவருகிறது.
