உயிர்த்த ஞாயிறு தினத்தில் கைதுசெய்யப்பட்ட இருவருக்கு விடுதலை
கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு ஆராதனையின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரை விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு கடற்கரை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேவாலய வளாகத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் குறித்த இருவரும் நடமாடுவதைக் கவனித்த பின்னர் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்ட நடவடிக்கை
இது தொடர்பில் நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்த பொலிஸார், பின்னர் எந்த குற்றச்சாட்டையும் கண்டுபிடிக்கவில்லை என்றும், எனவே கைது செய்யப்பட்ட நபர்கள் மீது மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மேலதிக உத்தரவுகள் எதுவும் தேவையில்லை என்றும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இருவரையும் உடனடியாக விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.