தொலைக்காட்சிகளின் பெண் அறிவிப்பாளர்கள் முகங்களை மறைக்கவேண்டும்! தாலிபான்களின் உத்தரவு!
ஆப்கானிஸ்தானில், தொலைக்காட்சிகளின் பெண் தொகுப்பாளர்கள், மற்றும் ஏனைய பெண் அறிவிப்பாளர்கள், தொலைக்காட்சி திரையில் தோன்றும்போது முகங்களை மறைக்கவேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமையன்று இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து பெண்களும் பொது இடங்களில் முகத்திரை அணிய வேண்டும் அல்லது அவர்கள் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னரே தற்போதைய உத்தரவு வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில், பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன, ஆண் பாதுகாவலர் இல்லாமல் அவர்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் பெண்களுக்கான மேல்நிலைப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
இந்தநிலையில் தாலிபான்களின் இந்த உத்தரவை கேட்டு, அதிர்ச்சியடைந்ததாக காபூலில் உள்ள உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும் பெண் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது, தமது பணிகளை நிறுத்தும் வகையில் கொடுக்கப்படும் அழுத்தம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாயை மூடிக்கொண்டு தம்மால் எவ்வாறு செய்திகளை வாசிக்கமுடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விடயத்தில் சர்வதேசம் தாலிபான்களுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இந்தநிலையில் குறித்த புதிய ஆணை மே 21 முதல் நடைமுறைக்கு வரும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.