மன்னாரில் கரை ஒதுங்கிய கடலாமைகள்
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் இரண்டு கடலாமைகள் பாரிய காயங்களுடன் கரை ஒதுங்கியுள்ளதாக தெரியவருகிறது.
அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் மன்னார் கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடுமையான காயங்களுடன் இன்று காலை 2 கடலாமைகள் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளன.
அவற்றில் ஒரு கடலாமை உயிரிழந்துள்ளதோடு மற்றைய கடலாமை உயிருடன் காணப்படுவதாக தெரியவருகிறது. கடற்படையினர் குறித்த கடலாமைகள் கரை ஒதுங்கியமை தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
எனினும் நீண்ட நேரமாகியும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வராத நிலை காணப்பட்டதோடு, உயிருக்குப் போராடும் கடும் காயங்களுடன் கரை ஒதுங்கிய மற்றைய கடலாமையை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிய வருகின்றது.
இச்செய்தி எழுதும் வரை குறித்த பகுதிக்கு அதிகாரிகள் யாரும் செல்லவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அண்மையில் வங்காலை மற்றும் சிலாபத்துறை கடற்கரை பகுதிகளிலும் கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியமை குறிப்பிடத்தக்கது.




