ரஸ்யா மீது விதிக்கப்படவுள்ள பொருளாதார தடை: ட்ரம்பின் எச்சரிக்கை
உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரை ரஸ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது,
"போர் களத்தில் உக்ரைனுக்கு எதிராக முற்றிலும் ஒரு கடுமையான தாக்குதலை ரஸ்யா தொடுத்து வருகிறது.
பொருளாதார தடை
இதனால் ரஸ்யா(Russia) மீது மிகப்பெரிய அளவிலான பொருளாதார தடைகளையும், வரிகளையும் விதிப்பது குறித்து நான் பரிசீலனை செய்து வருகிறேன்.
அமைதி ஏற்படுவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் இறுதி தீர்வுக்கான ஒப்பந்தம் ஏற்படும் வரை இந்த தடைகள் நடைமுறையில் இருக்கும். ரஸ்யாவும், உக்ரைனும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
ரஸ்யா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார்.
ரஸ்ய ஜனாதிபதி புடின்
இதுதொடர்பாக ரஸ்ய ஜனாதிபதி புடினுடன் தொலைபேசியில் கலந்துரையாடினார்.
மேலும் வெள்ளை மாளிகையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் ட்ரம்ப் சந்திப்பின்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போர் நிறுத்தத்துக்கு ஜெலன்ஸ்கி மறுத்ததால் ட்ரம்ப் அதிருப்தி அடைந்துள்ளார்.
இதையடுத்து உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையிலே அவர் ரஸ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
அமைதி பேச்சுவார்த்தை
இதற்கிடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஸ்யா ஜனாதிபதி புடின் தயாராக இருப்பதாக ரஸ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா, ரஸ்யா அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் நடைபெற்றது.
இந்நிலையில் உக்ரைன் அதிகாரிகளுடன் அமெரிக்கா 11ஆம் திகதி சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |