ட்ரம்பின் சர்ச்சைக்குரிய நிதி ஒதுக்கீடு: அமெரிக்க செனட் குடியரசுக் கட்சியினரிடையே கடும் அரசியல் குழப்பம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்துள்ள சர்ச்சைக்குரிய 180 கோடி டொலர் மதிப்பிலான "அரசியல் பழிவாங்கல் எதிர்ப்பு" நிதிக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து செனட் சபையின் குடியரசுக் கட்சியினரிடையே கடுமையான பிளவு ஏற்பட்டுள்ளது.
அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்டதாகக் கருதப்படும் ட்ரம்பின் அரசியல் கூட்டாளிகளுக்கு வரி செலுத்துவோரின் பொதுப் பணத்திலிருந்து இழப்பீடு வழங்குவதற்காக இந்த நிதி உருவாக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப்பை சந்தித்த பின்னர் பிலிப்பைன்ஸ்க்கு அச்சுறுத்தல் விடுக்கும் சீனா - கவலை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சர்
செனட் சபையில் நிலவி வரும் பதற்றம்
டொனால்ட் ட்ரம்பின் வரி ஆவணங்களை தவறாகக் கையாண்டதாகக் கூறி, ட்ரம்ப் நிர்வாகத்தின் நீதித்துறைக்கும் உள்நாட்டு வருவாய் சேவைக்கும் (IRS) இடையே ஏற்பட்ட ஒரு சட்டரீதியான சமரசத்தின் மூலம் இந்த நிதி உருவாகியுள்ளது.
எனினும், இந்த நிதி ட்ரம்ப் தனது சொந்த ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்றும், ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க நாடாளுமன்றத்தைத் தாக்கிய வன்முறையாளர்களுக்கு இதில் இருந்து பணம் வழங்கப்படலாம் என்றும் கடும் கவலைகள் எழுந்துள்ளன.

ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு நிதி வழங்குவதற்கான 72 பில்லியன் டொலர் மதிப்பிலான முக்கிய மசோதாவை நிறைவேற்ற வேண்டுமானால், இந்த நிதிக்கு செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஆனால், குடியரசுக் கட்சியின் 53 செனட்டர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இதற்குத் தயக்கம் காட்டி வருகின்றனர்.
நிதியை சொந்த தேவைக்களுக்காக பயன்படுத்துவாரா ட்ரம்ப்..
இந்த நிதியிலிருந்து ட்ரம்பின் குடும்பத்தினருக்கோ அல்லது வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கோ பணம் வழங்கப்படாது என்று தற்காலிக சட்ட மா அதிபர் டோட் பிளான்ச் உறுதியளித்த போதிலும், குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை எழுத்துப்பூர்வமாக மற்றும் நாடாளுமன்றக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த நிதிக்கு ஒரு கூட்டாட்சி நீதிமன்றம் தற்காலிகத் தடையும் விதித்துள்ளது. அமெரிக்காவில் வரவிருக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் இந்த விவகாரம் தங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று குடியரசுக் கட்சியின் தேர்தல் உத்தியோகஸ்தர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏற்கனவே விலைவாசி உயர்வு, ஈரானுடனான போர் மற்றும் ட்ரம்பின் மீதான அதிருப்தி போன்ற சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்தச் சர்ச்சைக்குரிய நிதி ஒதுக்கீடு கட்சியின் வெற்றியைப் பாதிக்கும் என்று பாதுகாப்பான தொகுதிகளில் போட்டியிடும் உறுப்பினர்கள் கூட அச்சம் வெளியிட்டுள்ளனர். இதனால் வாஷிங்டன் அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.