தொடரும் பௌத்த சிங்கள மயமாக்கல் : யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்
யார் ஆட்சிக்கு வந்தாலும் பௌத்த சிங்கள மயமாக்கல் தொடருகின்றது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு மேலும் தெரிவிக்கையில், திருகோணமலையில் தமிழர் தாயகத்தில் கடற்கரைப்பிரதேசத்தில் சட்டத்திற்கு முரணாக புத்த பிக்குகளினால் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டிருக்கின்றது.
அங்குள்ள தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பின் பின் சட்ட அனுமதியற்ற கட்டுமானம் என்று சொல்லி பொலிசாரினால் அப்புறப்படுத்தப்படுகின்றது.
இதன்பிறகு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தால் புத்தர் சிலையின் பாதுகாப்பு காரணமாக தான் அப்புறப்படுத்தப்பட்டது மீண்டும் நிறுவப்படும் என்ற பின் மீண்டும் அதே இடத்தில் அரசாங்கத்தால் புத்த பிக்குகள் மற்றும் பொலிசாருடன் இணைந்து அதே புத்தர் சிலை நிறுவப்படுகின்றது.
தமிழர் தாயகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர்சிலை
மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகும் என்று நம்பி வாக்கு செலுத்திய தமிழ் மக்கள் இன்று முழுவதுமாக அரசினால் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர்.
இது இன்று நேற்றில்லை 76 வருடகாலமாக இந்த நாட்டில் இது தான் நடந்தேறியிருக்கின்றது.

சட்டமுரணாக தமிழர் தாயகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர்சிலை அகற்றப்பட்ட பின் நாடாளுமன்றத்தில் மீண்டும் நிறுவுவோம் என்று குறிப்பிட்டு மீள சிலையை மக்களின் எதிர்ப்புக்களை மீறி நிறுவியிருக்கும் செயல் எந்த அரசு அதிகாரத்திற்கு வந்தாலும் சிங்கள பேரினவாதப்போக்கு மாறாது என்பதையே உணர்த்துகின்றது.
புத்தர் சிலையின் பாதுகாப்பு கருதி அகற்றப்பட்டிருக்கின்றது என்று சொல்லுவது தொடர்ச்சியாக சிங்கள மக்களிடத்தில் தமிழர்களை தீயவர்களாக சித்தரிப்பதைத் தான் எடுத்துக்காட்டுகிறது.
புத்தர் சிலையை வைத்தது யார்? அமைதியாக தங்கள் அன்றாட வாழ்க்கையை வாழும் தமிழ் மக்களை குழப்பியது யார் ? புத்தர் சிலையை அகற்ற வந்த பொலிசாரின் கன்னத்தில் அறைந்தது யார்? இவர்களுக்கு எதிராக எல்லாம் இந்த நாட்டில் சட்டம் செயற்படாதா? நாட்டின் ஆட்சியாளர்கள் மக்களுக்கான சேவையை ஆற்றுவதைக்காட்டிலும் புத்த பிக்குகளின் பேச்சை வேதவாக்காக கேட்டு நடப்பதையே இனப்பிரச்சினை தொடங்கிய காலகட்டத்திலிருந்து அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
எந்தவொரு சிங்களபேரினவாத அரசும்
ஏன் இனப்பிரச்சினையின் முக்கிய காரணமே சிங்கள பௌத்தமயமாக்கல் தான். யுத்தத்தின் ஆணிவேரும் இது தான். தொடர்ச்சியாக தமிழர் நிலங்கள் புத்த வழிபாடு என்ற பெயரிலே பௌத்த சிங்கள மயமாக்கப்பட்டுக் கொண்டே இருந்து வந்துள்ளது.
சிங்கள குடியேற்றங்களால் தமிழர் குடியேற்றப்பரம்பல் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டே இருந்து வந்துள்ளது. வரலாற்றில் மகாவலி ஓயா மற்றும் கல் ஓயா குடியேற்றம் என்று தமிழர் நிலங்கள் முற்றுமுழுதாக பெயர் மாற்றம் பெற்று முழுவதுமாக மாறியிருக்கிறது.

சிங்கள மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் தமிழ் மக்கள் சிங்கள மக்களின் வழிபாட்டிற்கு என்றுமே எதிரானவர்கள் இல்லை.
நாங்கள் அனைத்து மதத்தையுமே சமமாக மதிப்பவர்கள். அனைத்து சமய வழிபாடுகளையும் மதித்து நடப்பவர்கள் அவமதிப்பது கிடையாது. ஆனால் வழிபாடு என்ற பெயரிலே திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களால் தமிழருடைய நிலங்கள் பறிபோவதென்பதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
இறுதியாக எந்தவொரு சிங்களபேரினவாத அரசும் தமிழ்மக்களின் பக்கம் நீதியின் பக்கம் நின்றதில்லை. மிகச்சிறந்த அரசியல் தெளிவு பெற்ற நேர்மையான இளைய தமிழத்தேசிய அரசியல் கலாசாரம் வடகிழக்கில் வரவேண்டும்.
அப்போது தான் வெள்ளம் வர முன் அணை கட்ட முடியும். தமிழ் மக்களாக அனைவரும் உங்கள் சிந்தனைகளில் ஒன்றிணையுங்கள். நாங்கள் ஒன்றை நம்புகின்றோம் தூய தமிழ் தேசியம் நிச்சயம் வெல்லும் என தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |