நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்த அநுர அரசாங்கம்! கடுமையாக சாடிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழ் மக்களுக்கும் உங்களுக்கு வாக்களித்த சிங்களரல்லாத வாக்காளருக்கும் முழுமையான துரோகத்தை இழைத்திருக்கிறீர்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சு மீதான விவாதத்தின் போது திருமலை சட்ட விரோத விகாரை அமைப்பு குறித்து இன்றையதினம்(17) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புத்தர் சிலை
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

"உங்களை நம்பி,.நீங்கள் சொன்னதையெல்லாம் நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள்" திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை.
ஏனெனில், இனவாதத்தையும் மதவாதத்தையும் நீக்குவதாக நீங்கள் சொன்னதை நம்பி அவர்கள் உங்களுக்கே வாக்களித்திருந்தார்கள். இங்கிருக்கும் திருமலைக்கான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரையும் அவர்கள் தெரிவு செய்திருந்தார்கள்.
முழுமையான துரோகம்
நீங்கள் நேற்றிரவு எடுத்த நடவடிக்கையை எதிர்த்ததெல்லாம், சிங்கள காடையர்கள் மட்டுமே!! அதைக்கண்டு நீங்கள் உண்மையில் பின்வாங்கியிருக்கக்கூடாது, அந்த இனவாத மதவாத காடைத்தனத்தை கண்டு பின்வாங்கியிருந்திருக்ககூடாது.

உண்மையில் நீங்கள் என்ன செய்திருக்கவேண்டுமெனில் , மக்களிடம் சென்று எது சரி எது பிழை என்பதை, எப்படியான் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை நேர்மையுடன் சொல்லியிருந்திருக்கவேண்டும்.
ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் இப்போது செய்ததெல்லாம், நீங்கள் ( இனவாதிகள் இல்லை என)சொன்னதை நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கும் உங்களுக்கு வாக்களித்த சிங்களரல்லாத வாக்காளருக்கும் முழுமையான துரோகத்தை இழைத்திருக்கிறீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.