திருகோணமலை மோதல் சம்பவம் - பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள எச்சரிக்கை
திருகோணமலை - நிலாவெளி, அடம்போடை பகுதியில் பொலிஸார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொலிஸாரின் சட்டரீதியான கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,
போக்குவரத்து பொலிஸாருடன் இடம்பெற்ற மோதல் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவிவரும் நிலையில், சீருடையில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் கடமையை செய்ய விடாது தடுக்கின்றமை தண்டனைக்குரிய குற்றம்.
தப்பிச்சென்றவரை கைது செய்ய நடவடிக்கை
இந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தப்பிச் சென்ற மற்றைய சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வீதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸார் தாக்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
தலைக்கவசம் அணியாமல் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை நிறுத்த பொலிஸார் முயன்றபோது, குறித்த ஓட்டுனர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, சந்தேகநபர்களுடன் சிலர் சேர்ந்து பொலிஸாரை தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
