திருகோணமலையில் கரையொதுங்கி வரும் நீர்த்தாவரங்களால் கடற்றொழிலுக்கு பாதிப்பு
திருகோணமலை கடற்பரப்பில் ஒதுங்கியுள்ள நீர்த்தாவரங்களினால் மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக பெய்த மழையினால் ஆறுகள் மற்றும் குளங்களில் காணப்பட்ட இந்த நீர்த்தாவரங்கள் மகாவலி கங்கையினூடாக அள்ளுண்டு கடலை அடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
அத்துடன் சில நாட்களாக திருகோணமலை கடற்பரப்பில் மட்டுமல்லாது மூதூர், கிண்ணியா போன்ற இடங்களில் உள்ள கடற்பரப்புகளிலும் நீர்வாழை எனப்படும் நீர்த்தாவரங்கள் கரையொதுங்கி வருகின்றன.
மீன்பிடியில் வீழ்ச்சி
இவை மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் வலைகளில் சிக்குவதால் வலைகள் சேதமடைவதாகவும், மீன்பிடியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கடற்றொழிலாளர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் கடற்கரைகளில் கரையொதுங்கியுள்ள இத்தாவரங்களினால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அவற்றை துப்புரவுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் சுற்றுலாப்பயணிகள் ஈடுபட்டு வருகின்றார்கள்.
குறித்த நீர் தாவரக் கழிவுகளை இயற்கை பசளை தயாரிக்க பயன்படுத்த முடியும் எனவும் இதற்கான சரியான திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
