விபத்தில் இளைஞன் பலி: சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு (Photos)
திருகோணமலை-ரொட்டவெவ-மிரிஸ்வெவ பகுதியில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற லொறியின் சாரதியை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சுபராஜினி முன்னிலையில் இன்று (26) குறித்த சந்தேகநபரை முன்னிலைப்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட லொறியின் சாரதி கிண்ணியா மணியரசன் குளம் பகுதியைச் சேர்ந்த (36 வயது) உடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கடந்த 18ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் ரொட்டவெவ பள்ளிவாசலுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை திருட்டுத்தனமாக கொண்டு செல்லும் வழியில் திருகோணமலையில் இருந்து ஹொரவ்பொத்தானை பகுதிக்கு மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதே நேரம் குறித்த லொறியின் சாரதி விபத்து பற்றி தெரியப்படுத்தாமல் சென்ற நிலையில் மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த சந்ரலால் தலைமையில் சிசிடி கேமரா சோதனையிடப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.
இந்நிலையில் குறித்த சாரதி நேற்றிரவு கைது செய்யப்பட்டு இன்றையதினம் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் கலன்பிந்துனுவெவ-மெகொடவெவ-யகல்ல பகுதியைச்சேர்ந்த சஜித் லக்சான் ராஜபக்ச (19வயது) இளைஞர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.