'கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்' மூன்றாவது நாள் அஞ்சலி
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்களால் இன்றும் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பானம்
முள்ளிவாய்க்கால் படுகொலை வாரத்தின் மூன்றாவது நாள் அஞ்சலி யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, உயிர்நீத்த உறவுகளுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, அகவணக்கத்துடன் நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களால் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் - குருநகர்
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் மூன்றாம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் – குருநகர் சவக்காலையடி சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய வேலன் சுவாமிகள், யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள், சமூகமட்ட அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
முள்ளிவாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தின் 3வது நாள் நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத் தூபிக்கு அருகில் நடைபெற்றது.
இந் நிகழ்வினை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.
இவ்விடத்தில் ஒன்றுகூடியவர்கள் கஞ்சியினை அவ்விடத்தில் காச்சியதுடன் அதனை சிரட்டையில் கொண்டு வீதியினால் சென்றோருக்கும் பகிர்ந்து வழங்கினார்கள்.
அத்துடன் முள்ளி வாய்க்கால் கஞ்சி என்ற துண்டுப் பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இன்றைய நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகர சபை உறுப்பினர்கள், பாதிரிமார்கள், இந்து மதகுரு, பொது மக்கள் எனப் பலரும் பங்குகொண்டனர்.
1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி ஊர்காவல் படையினர், விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு சத்துருக்கொண்டான், கொக்குவில், பிள்ளையாரடி பிரதேசத்தில் வசித்தவர்கள் அழைத்துச் செல்லப்பட்ட 186பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இன்றைய தினம் 'கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை” 3ம் நாள் நிகழ்வு இந்த இடத்தில் நடத்தப்பட்டமை சிறப்பம்சம் மிக்கதாகும்.
முல்லைத்தீவு
முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன் மூன்றாவது நாளில் வடக்கு கிழக்கு வலிந்து காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டிலும் பொது அமைப்புகழும் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
கஞ்சி ஆக்கும் செயற்பாட்டினை ஆரம்பிக்க குறித்த பகுதிக்கு ஏற்பாட்டாளர்கள் வருகை தந்த நிலையில் புலனாய்வாளர்கள் வருகை தந்து புகைப்படம் எடுத்து கண்காணிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றையதினம் வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
வவுனியா ஆலடி பிள்ளையார் கோவிலடியில் இடம்பெற்ற நிகழ்வில் முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்றதனை நினைவு கூர்ந்து இச்செயற்பாட்டை முன்னெடுத்ததாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வீதியால் சென்றோருக்கும் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதுக்குடியிருப்பு
முள்ளிவாய்க்காலில் பசிபோக்கிய முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி புதுக்குடியிருப்பு - தேராவில் பகுதியில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேராவில் கிராம மக்கள் தாமாக முன்வந்து தேரவில் பேருந்து தரிப்பிடத்தில் கஞ்சி காச்சி வீதியால் செல்லும் மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையினை இன்று முன்னெடுத்துள்ளார்கள்.
[
வல்வெட்டித்துறை
தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 3நாள் நினைவேந்தல் வல்வெட்டித்துறை தீருவிலில் இடம்பெற்றுள்ளது.
இன்று சனிக்கிழமை (14) மாலை தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை தலைவர் எஸ்.நிஷhந்தன் மற்றும் தமிழ் உணர்வாளர் செழியன் ஆகியோர் ஈகைசுடர் ஏற்றி எஞ்சலி செலுத்தினர்.