பயணத் தடையால் பலன் கிட்டவில்லை! இனிவரும் காலங்கள் ஆபத்தானவை
நாட்டில் மூன்று வார காலமாக பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ளபோதும் அதனால் எதிர்பார்த்த பலன் எதுவும் கிடைக்கவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் இரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
ஏற்கனவே இருந்த நிலைமையை விடவும் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கையிலும் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதே தவிர அந்த எண்ணிக்கைகள் குறையவில்லை.
இவ்வாறான நிலையில் பயணக் கட்டுப்பாட்டை தளர்த்த தீர்மானித்தால் நாடு மேலும் மோசமான நிலைமைக்கே தள்ளப்படும்.
நாட்டில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்துள்ளது. அதேபோன்று புதிய கொத்தணி உருவாகி ஒன்றரை மாதங்களில் ஒரு இலட்சம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்வதையே காண முடிகின்றது.
இந்த நிலையில் பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தியதன் நோக்கமானது தொற்றாளர்களின் எண்ணிக்கையையும் மரணங்களின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்துவதற்கானதே ஆகும்.
ஆனால் பயணக் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு அமுலால் எதிர்பார்த்த பலனை நாங்கள் அனுபவிக்கவில்லை. தொற்றாளர் எண்ணிக்கையோ மரணங்களின் எண்ணிக்கையோ குறையவில்லை.
பயணக் கட்டுப்பாடு இருந்த போதும் நகர்ப்புறங்களில் 40 முதல் 50 வீதம் வரையான வாகன நடமாட்டமும் மக்களின் நடமாட்டமும் இருந்தது.
இதனால் பயணக் கட்டுப்பாட்டில் மக்களின் ஒத்துழைப்பு திருப்தி அளிப்பதாக இல்லை. ஆகவே இனிவரும் காலங்கள் மிகவும் ஆபத்தானவையே.
அதிகமான நோயாளர்கள் அடையாளம் காணலாம் என்பதுடன் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்.
இந்த நிலையில் பயணக் கட்டுப்பாட்டை எப்போது எவ்வாறு தளர்த்துவது என்ற கேள்விகள் சகல தரப்பினரிடையேயும் நிலவுகின்றது.
இதனால் தான் நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் நடத்திச் செல்லும் வகையில் தடுப்பூசி அவசியமானது என்பதனை தெளிவுப்படுத்தியுள்ளோம்.
இதனால் தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பாக முறைமையொன்றையும் முன்னுரிமை பட்டியலையும் தயாரித்து வழங்கியுள்ளோம்.
இவ்வாறாக தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் நாட்டை படிப்படியாக திறக்க முடியும். அதேபோன்று நாளாந்தம் செய்யப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் விஸ்தரிப்பையும் காணவில்லை.
அதனை அதிகரிக்கும் போதே உண்மையான தொற்றாளர்கள் எண்ணிக்கையை அறிந்து கொள்ள முடியும். அத்துடன் ஆபத்தான பிரதேசங்களையும் அடையாளம் காணக் கூடியதாக இருக்கும்.
அதன் மூலம் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும். இந்த நிலையில் பயணக் கட்டுப்பாட்டால் நாங்கள் பலனை அனுபவிக்க முடியவில்லை.
இதனால் பயணக் கட்டுப்பாடு தொடர்பாக சிந்திக்க வேண்டும். இந்தக் கட்டத்தில் கட்டுப்பாட்டை தளர்த்தினால் மேலும் மோசமான நிலைக்கே நாடு செல்லும் என குறிப்பிட்டுள்ளார்.