கொழும்பு நகருக்கு சொந்த வாகனங்களில் வருவோருக்கு புதிய திட்டம்
2022 ஆம் ஆண்டளவில் பயணிகளுக்கு திறமையான போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்காக டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதில் முதற்கட்டமாக 2,000 தனியார் பேருந்துகளுக்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் மக்கள் வசதிகளைப் பெறுவதற்கு மொபைல் செயலி ஒன்றும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய செயலிகள் மூலம் பொது மக்கள் தங்கள் அன்றாடப் பயணங்களுக்கு அழைத்துச் செல்லும் பேருந்துகள், வரும் நேரம், பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விரிவான தகவல்களைப் பெற முடியும்.
அத்துடன் 2022 ஆம் ஆண்டளவில் பொதுமக்களுக்கு இ-டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை எட்டு முக்கிய நகரங்களில் மேலும் எட்டு பல்வகை போக்குவரத்து மையங்களை அமைப்பதன் மூலம் கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் 'பார்க் அண்ட் ரைட்'( Park and Ride) விசேட பேரூந்து போக்குவரத்து அமைப்பை விரிவுபடுத்துவது அமைச்சின் திட்டமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.