திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸாருக்கு உடனடி இடமாற்றம்
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து அங்கு கடமையாற்றி வரும அனைத்து பொலிஸாரையும் உடன் இடமாற்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த சூட்டுச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணை இடம்பெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 24ம் திகதி இரவு பொலிஸ் சாஜன் ஒருவர் பொலிஸார் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 4 பொலிஸார் உயிரிழந்ததுடன், 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடாத்திய பொலிஸ் சாஜன் துப்பாக்கிகளுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாகச் சம்பவ இடத்திற்கு பொலிஸ் மா அதிபர், கிழக்கு பிராந்திய சிரேஷட பிரதி பொலிஸ் மா அதிபர் உட்படப் பல பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் சென்று நிலைமைகளை ஆராய்ந்து இச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரையும் முதலில் இடமாற்றுமாறு ஆலோசனையின் கீழ் கட்டம் கட்டமாகக் கடமையாற்றிவரும் பொலிஸாரையும் இடமாற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இன்று குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உட்படச் சிலர் உடனடியாக
வேறு பொலிஸ் நிலையங்களுக்கு இடமாறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.