இந்தியாவில் அக்னிபாத்! போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு - உயிரிழப்பு, காயங்கள்
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தெலுங்கானாவில் இடம்பெற்ற போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
15 பேர் படுகாயம் அடைந்தனர்.
தெலுங்கானா தொடரூந்து நிலையத்தில் வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தவே பொலிஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இந்தநிலையில் இந்திய அமைச்சரவையினால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள “அக்னிபாத்” திட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்ட எதிர்ப்புக்களால், நாடளாவிய ரீதியில் சுமார் 200 தொடரூந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
35 தொடரூந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பீஹார், தெலுங்கானா உட்பட்ட மாநிலங்களில் இந்த திட்டத்துக்கு எதிராக தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துள்ள இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பீஹாரில் பாரதீய ஜனதாக்கட்சியின் நிர்வாகிகளின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன.
அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சரின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்று தமிழக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
இந்திய தரைப்படை, கடற்படை வான் படைக்கு வீரர்களை தேர்வு செய்வதற்காக, 'அக்னி பாதை' என்ற புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தொழில் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை அமர்த்தி, பின்னர் தூக்கி எறியும் நடைமுறை போன்று ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை இந்திய படையில் சேர்த்துவிட்டு, தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு அளிக்காமல் 4 ஆண்டுகளில் அவர்களை தூக்கி வீசுகின்ற நடைமுறை, இதன் மூலம் கொண்டு வரப்படவுள்ளது.
அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வரம்பு 17 முதல் 21ஆக இருந்தது.
இந்த திட்டத்தால் அரசாங்கம், இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்தமான எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும்.
எனவே 'அக்னி பாதை' திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.