முல்லைத்தீவு அருட்தந்தைக்கு நேர்ந்த கதியால் தாய்க்கு ஏற்பட்ட பரிதாப மரணம்: நெஞ்சுருகும் நிமிடங்கள் (Video)
கத்தோலிக்க அருட்தந்தையான ஜிம் பிறவுன் மற்றும் அவருடைய உதவியாளரான வென்சலோஸ் விமலதாஸ் ஆகியோர் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி காணாமல்போனார்கள்.
கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த கிராமத்தில் வசித்த இடம்பெயர்ந்த சிவிலியன்களை பார்வையிடுவதற்காக அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அல்லைப்பிட்டியில் அமைந்திருக்கும் கடற்படையினரின் சோதனைச் சாவடியில் அவர்களை ஆட்கள் இறுதியாகப் பார்த்திருந்தார்கள்.
கடற்படை அதிகாரிகளிடம் மன்றாடிய அருட்தந்தை
அல்லைப்பிட்டி கிராமத்தைப் பொருத்தவரையில் ஆகஸ்ட் மாதம் துன்பங்கள் நிறைந்த ஒரு மாதமாக இருந்து வந்துள்ளது.
போரிலிருந்து தப்பி, உள்ளூர் கத்தோலிக்க தேவாலயத்திற்கு தஞ்சம் கோரி வந்திருந்த சிவிலியன்களை ஆகஸ்ட் 12ஆம் திகதி இரவு அருட்தந்தை பிறவுண் வரவேற்றிருந்தார்.
ஆனால், இந்த தேவாலயமும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதுடன், தேவாலய வளவுக்குள் 36 பேர் கொல்லப்பட்டார்கள். மேலும், பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என அருட்தந்தை பிறவுண் கடற்படை அதிகாரிகளிடம் மன்றாடி கேட்டுக்கொண்டிருந்தார்.
முன்னர் மே மாதத்தில் இக்கிராமத்தில் நான்கு மாதக் குழந்தை மற்றும் நான்கு வயதுடைய பிள்ளை ஆகியோரையும் உள்ளிட்ட விதத்தில் ஒன்பது சிவிலியன்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.
பெருமளவுக்கு இராணுவமயமாக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாவட்டத்திலும், நாட்டின் ஏனைய பாகங்களிலும் பெருந்தொகையான தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்படும் சம்பவங்களுக்கு இரையாகி வந்த ஒரு காலப் பிரிவாக அது இருந்து வந்தது.
அவர் ஒரு கத்தோலிக்க அருட்தந்தையாக இருந்து வந்த காரணத்தினால் காணாமற்போன சம்பவம் நன்கு அறியப்பட்ட ஒரு சம்பவமாக இருந்து வந்தது.
ஒரு கத்தோலிக்க அருட்தந்தை காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கூட உண்மை மற்றும் நீதி என்பன ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை என்ற விடயத்தை கடந்த பல ஆண்டுகள் எடுத்துக் காட்டியுள்ளன.
அருட் தந்தை பிறவுண் கடைசியாக காணப்பட்ட கடற்படை சோதனைச் சாவடியின் பதிவேட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு பதில் நீதவான் நீதிமன்ற நீதவான் கட்டளையிட்டிருந்த போதிலும், அப்பதிவேட்டை கையளிப்பதற்கு கடற்படையினர் மறுத்துள்ளார்கள்.
அருட் தந்தையின் நேரடிச் சாட்சியம்
நீதவான் நீதிமன்ற நீதவான் மற்றும் பொலிஸார் அல்லைப்பிட்டி கிராமத்திலிருந்து திரும்பிச் செல்லும் பொழுது கடற்படையினர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு (UTHR – Jaffna) 2007ஆம் ஆண்டில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் இதனை ஒத்த ஒரு விளக்கத்தை முன்வைத்திருந்தது.
அந்த இரு அறிக்கைகளும் கடற்படையினர் அருட்தந்தை பிறவுணை பகைமையுடன் நோக்கியிருந்ததாகவும், அருட்தந்தை பிறவுண் கடற்படை முகாமை வந்தடைந்த நேரம், கடற்படையினர் குறிப்பிடும் நேரத்திலும் பார்க்க வேறுபட்டதாக இருந்து வந்தனர் என்பதனை மற்றொரு கத்தோலிக்க அருட் தந்தையின் நேரடிச் சாட்சியம் குறிப்பிடுகின்றது என்பதனையும் சுட்டி காட்டியிருந்தன.
அருட்தந்தை பிறவுண் காணாமலாக்கப்பட்ட சம்பவம், 2006 மே மாதத்தில் அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் இரு அயல் கிராமங்களில் நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவங்கள் என்பன தொடர்பாக 2006ஆம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணை செய்ய வேண்டுமென பணிக்கப்பட்டிருந்த பாரதூரமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் 16 இல் ஒன்றாகும்.
2009 மே மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அந்த ஆணைக்குழுவின் அறிக்கை போதியளவில் சான்றுகள் இல்லாதிருப்பதனாலும், “மரணமடைந்ததாக கூறப்படுபவரின் சடலம்” கண்டுபிடிக்கப்படாத காரணத்தாலும் அருட்தந்தை பிறவுணின் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படவில்லை எனக் குறிப்பிடுகின்றது.
அல்லைப்பிட்டி படுகொலைகளை விசாரணை செய்வதற்கு போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது. தனது மகனுக்கு என்ன நேர்ந்தது என்பதனை அறியாமலேயே அருட்தந்தை பிறவுணின் தாயார் காலமானார்.
அவர்களுடைய வீட்டுக்குச் செல்லும் அனைவரிடமும், அருட்தந்தை அவருடைய வயது
முதிர்ந்த தந்தை, தான் மரணிப்பதற்கு முன்னர் தனது மகனுக்கு என்ன நேர்ந்தது
என்பதனை அறிந்து கொள்ள முடியுமா என்பது குறித்து கவலையுடன் கேட்பது வழக்கம்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
