முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் துண்டிக்கப்பட்டிருந்த போக்குவரத்து வழமைக்கு
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டிருந்த கிராமங்களுக்கான போக்குவரத்துக்கள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள சுமார் 15இற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டிருந்தன.
கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை மற்றும் குளங்கள் நிரம்பி வான் பாய்ந்தமையால் இந்த நிலை ஏற்பட்டிருந்தது. குறிப்பாக முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிறாட்டிகுளம் கிராமத்திற்கான போக்குவரத்து கடந்த 5 நாட்களுக்கு மேலாகத் துண்டிக்கப்பட்டிருந்தது .
அத்துடன் வவுனிக்குளம் தொடர்ந்து வான் பாய்ந்துவந்தமையால் பாலியாற்றினை அண்டிய கரையோரப் பிரதேசங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தன.
இதேபோன்று துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கோட்டை கட்டிய குளம், அம்பலப் பெருமாள் குளம் தென்னியன்யன் குளம், மருதங்குளம் ஆகிய குளங்கள் வான் நிரம்பி வான் பாய்ந்தமையால் குறித்த கிராமங்களுக்கான போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டிருந்தன.
தற்போது வெள்ள நீர் வடிந்து குளங்களின் வான் பாயும் அளவுகளும் குறைவடைந்துள்ளமையால் போக்குவரத்துக்கள் வழமைக்குத் திரும்பியுள்ளது.
இருந்தாலும் குறிப்பிட்ட சில இடங்களில் வீதிகளில் வெள்ளநீர் காணப்படுவதால் போக்குவரத்து சிரமங்கள் காணப்படுகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


