வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய தினம் (02.07.2023) தீவின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்குத் தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஓரளவு பலத்த காற்று
சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடமத்திய மாகாணத்திலும் புத்தளம், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடும்.
இதன்போது ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கடல் பகுதிகள் ஏற்படும் மாற்றம்:
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு, காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யும்.
அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்
அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
கொழும்பு மற்றும் காலி ஊடாக புத்தளம் முதல் அம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் மிதமாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |