இன்று கரையை கடக்கும் மொக்கா சூறாவளி: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மொக்கா சூறாவளி நேற்றைய தினம் (13.05.2023) இரவு 11.30 மணியளவில் 17.9N மற்றும் 91.0Eக்கு அருகில் மையம் கொண்டது.
இது வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு பங்களாதேஷ் மற்றும் வடக்கு மியன்மார் கடற்கரைகளை இன்றைய தினம் (14.05.2023) ஆம் திகதி நண்பகல் வேளையில் கடக்க அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், வட அகலாங்குகள் 05Nக்கும் 20Nக்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 83Eக்கும் 100Eக்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோருக்கும் கடற்றொழிலாளர் சமூகமும் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடற்தொழில் நடவடிக்கை
மேலும், புத்தளத்தில் இருந்து மன்னார், காங்கேசன்துறை, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில், அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஊடாக காலி வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும், கடலில் பயணம் செய்வோரும், கடற்றொழில் சமூகமும் இவ்விடயம் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில், கடலில் பயணம் செய்வோரும் கடற்றொழிலாளர் சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடற்பரப்பில் காற்று
தீவைச் சூழவுள்ள கடற்பரப்பில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றானது மணிக்கு (35-45) கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-65 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகவும், சில சமயங்களில் மிகவும் கொந்தளிப்பாகவும் இருக்கும்.
இடியுடன் கூடிய மழை
மேலும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றைய தினம் (14.05.2023) இடியுடன் கூடிய மழை மற்றும் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள். JOIN NOW |

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri
