புலஸ்தினியை கைது செய்ய இன்டர்போலின் உதவி பெற்றுக்கொள்ளப்படும்! - அமைச்சர் சரத் வீரசேகர
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி உயிரிழக்கவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டால் அவரை கைது செய்ய இன்டர்போல் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர இதனை தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை பரிசீலனை செய்த அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம் பெற்றது.
இதன் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “2019 ல் கிழக்கில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் புலஸ்தினி ராஜேந்திரன் உயிரிழந்து விட்டார் என்று கூற முடியாது, டி.என்.ஏ பரிசோதனையில் அவரது மரணம் அல்லது அவர் உயிருடன் வாழ்வது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், புலஸ்தினி உயிரிழக்கவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டால் அவரை கைது செய்ய இன்டர்போல் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும், எவ்வாறாயினும், இலங்கையில் இருந்து தப்பிக்க புலஸ்தினிக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் உதவி செய்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் ஆதாரங்கள் எவையும் கிடைக்கவில்லை.
இதேவேளை, இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய 54 பேர் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டனர், அவர்களில் 50 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.