வடக்கு - கிழக்கு அரசியலில் திடீர் திருப்பம்: ஆட்சியை இழக்கும் தமிழரசுக் கட்சி
தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்றையதினம்(2) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
ஒப்பந்தம் கைச்சாத்து
தமிழ் தேசிய பேரவையின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கமும் கையொப்பமிட்டனர்.
ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் தமிழ் தேசிய பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், ந.சிறீகாந்தா, பொ.ஐங்கரநேசன், எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.சரவணபவன், க.அருந்தவபாலன், க.நாவலனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், சுரேஸ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார், நாகலிங்கம் இரட்ணலிங்கம், பா.கஜதீபன், க.சர்வேஸ்வரா உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.
உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் வடக்கில் பெரும்பாலான சபைகளில் ஆட்சி அமைப்பதில் தமிழ் கட்சிகளிடையே இழுபறி நிலையே காணப்பட்டது.
தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே தொடர்ச்சியாக நடைபெற்ற சந்திப்புக்களை தொடர்ந்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சி முன்னிலையில் உள்ள சபைகளில் ஆட்சியமைக்கலாம் என்று கூறிய நிலையில் தமிழ் தேசிய பேரவை- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திட்டமையானது இலங்கை தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதை கேள்விக்குட்படுத்தியுள்ளது.
அவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமாக இருந்தால் தேசிய மக்கள் சக்தியுடன் கூட்டுச் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, அதற்கும் தமிழரசுக் கட்சி தயங்காது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
யாழ் மாநகர சபை மேயர் தெரிவில் திடீர் திருப்பம்
யாழ் மாநகர சபை மேயர் தெரிவில் திடீர் திருப்பம் என்று செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் தேர்தல் முடிந்த மறு நாள் 7 May 2025 தமிழ் தேசிய பேரவை- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கிடையில் எவ்வாறான விட்டுக் கொடுப்பு சாத்தியம் என்ற கருத்த முன்வைக்கப்பட்டது, இன்று செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட அரசியல் கருத்து இரு கட்சிகளாலும் பிரதிபலிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.







