முஸ்லிம் மக்களிற்கு ஒரு மாயாஜாலத்தை காட்டி கூட்டமைப்பினர் ஏமாற்றுகின்றனர்! - ஐக்கிய காங்கிரஸ் தலைவர்
சுமந்திரன்(Sumanthiran) போன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முஸ்லிம்களைத் தனியான இனம் என இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவ்வாறு அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் முஸ்லிம்கள் விரும்பாத வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்குக் கோரமாட்டார்கள் என ஐக்கிய காங்கிரஸ் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத்(Mubarak Abdul Majeed) தெரிவித்துள்ளார்.
கல்முனையில் அமைந்துள்ள ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இன்று(16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழ் பேசும் மக்கள் என அண்மைக்காலமாக உரையாற்றி வருகின்றார்.
எனினும் முஸ்லிம்கள் தமிழ் பேசும் மக்களாக இருந்தாலும் அம்மக்களைத் தனியான இனம் எனச் சுமந்திரன் போன்றவர்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு ஏற்றுக்கொண்டிருந்தால் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்குக் கோரமாட்டார்கள்.
ஏனெனில் வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் 15 முதல் 17 வீதம் வரை குறைக்கப்படுகின்றார்கள் என்ற உண்மையைத் தெரிந்திருந்தும் கூட இவர்கள் வடக்கு கிழக்கு இணைப்பினை வலியுறுத்தி வருகின்றார்கள் என்றால் அவர்களது வார்த்தையில் தமிழ் பேசும் மக்கள் என்பதற்கு உண்மையான அர்த்தமில்லை என்பதைக் கூற முடியும்.
இவ்வாறு தமிழ் பேசும் மக்கள் எனக் கூறி முஸ்லிம் மக்களிற்கு ஒரு மாயாஜாலத்தைக் காட்டி முஸ்லிம்களைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஏமாற்ற முயல்கின்றனர் என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
அத்துடன் தமிழ் பிரதேச செயலக விடயத்தை நிறுத்தி ஒரு குடையின் கீழ் செயற்படத் தைரியம் உங்களுக்கு உள்ளதா என்பதைக் கேட்க விரும்புகின்றேன்.
ஆனால் தமிழ் முஸ்லிம் மக்களைப் பிரிப்பதற்குத் திட்டமிட்டு விட்டு ஊடகங்களில் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றீர்கள். தேர்தல் வருகின்ற போது ஒரு பேச்சும் அது முடிந்த பின்னரும் மற்றுமொரு பேச்சும் பேசுவது கூட்டமைப்பினருக்கு வழமையாகி விட்டது.
அத்துடன் தேர்தல் காலங்களில் முரண்பாடுகளைத் தோற்றுவிப்பவர்களாக மாறியும் விடுகின்றீர்கள். எனவே உண்மையான உள சுத்தியுடன் இருந்தால் மூன்று விடயங்களில் உறுதியாக இருக்க வேண்டும்.
அதாவது முஸ்லிம்கள் விரும்பாத வட கிழக்கு இணைப்பினை இணைக்க முயற்சிக்க மாட்டோம். கல்முனை உப பிரதேச செயலகத்தை ரத்து செய்து ஒரு பிரதேச செயலகத்தின் கீழ் இயங்க முன்வர வேண்டும். தோப்பூர் பிரச்சினைக்குத் தீர்வு காண உங்களால் முடியுமா எனக் கேட்க விரும்புகின்றேன்.
மட்டக்களப்பில் உள்ள முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட்டு வாருங்கள் நாங்களும் தமிழ் பேசும் மக்களாக இணைந்து செயற்படத் தயாராகவுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கல்குடா தொகுதி பொறுப்பாளரும் கட்சியின் பிரதித் தலைவருமான சல்மான் வஹாப் மற்றும் கட்சியின் கல்குடா தொகுதி ஆலோசகர் முஹம்மத் ஹக்கீம் ஆகியோர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

போட்டோஸ் ஓவர், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட தொகுப்பாளினி பிரியங்கா.. இதோ Cineulagam
