நிலக்கரி டெண்டர் விவகாரம்! டில்வின் சில்வாவின் அதிரடி பாய்ச்சல்
நிலக்கரி டெண்டர் தொடர்பாக நிலவும் பிரச்சினைகள் காரணமாக சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலகக் கூடாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையிலுள்ள அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து பேசிய அவர்,
பதவி விலகல் தனிப்பட்ட முடிவு
பதவி விலகல் என்பது ஒரு தனிப்பட்ட முடிவு. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நிலக்கரி இறக்குமதி செயல்முறை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த அரசாங்கத்தின் போது, எரிசக்தி அமைச்சர் பதவியை வகித்தவர்களும் ஏனையவர்களும் இணைந்து டுபாயில் ஒரு நிலக்கரி நிறுவனத்தை நிறுவி, அந்த நிறுவனத்தின் மூலம் முறையான கொள்முதல் செயல்முறை இல்லாமல் நிலக்கரியை இறக்குமதி செய்து இலாபம் ஈட்டினர்.

தற்போதைய அரசாங்கம் அந்த முறையை மாற்றி, முறையான டெண்டர் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் குறைந்த விலையை சமர்ப்பித்த நிறுவனத்திற்கே டெண்டர் வழங்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட முன்னாள் அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய நிறுவனம் இந்த முறை டெண்டரை இழந்ததால், அவர்கள் பல்வேறு கதைகளை உருவாக்கி குற்றம் சாட்டுகின்றனர்.