வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரின் சடலங்கள் மீட்பு!
குருநாகல் பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்று(25.05.2023) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
வயோதிபரான ஓய்வுபெற்ற ஆசிரியர், அவரின் மகன், மகனின் மனைவி ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் இருந்து இன்று காலை 39 வயதுடைய கணவனும், 37 வயதுடைய மனைவியும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இருவரும் படுக்கை அறையில் சடலங்களாகக் கிடந்துள்ளனர்.
மூவரின் சடலங்கள் மீட்பு
அந்த அறையில் பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் இரண்டு கிருமி நாசினி போத்தல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த போத்தல்கள் வெற்று போத்தல்களாக இருந்துள்ளன.
இருவரும் கிருமி நாசினியை குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலங்கள் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேற்படி தம்பதியினர் உயிர்மாய்த்தமைக்கான காரணம் தெரியவரவில்லை.
இவ்வாறிருக்கையில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் தந்தையான ஓய்வுபெற்ற ஆசிரியர் (வயது 65) இன்று மாலை அதே வீட்டில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மகன் மற்றும் மருமகள் இறந்த துயரத்தால் அவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அவரின் சடலமும் குருநாகல் வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
உடற்கூற்று பரிசோதனை
மூன்று சடலங்கள் மீதான உடற்கூற்று பரிசோதனை நாளை காலை இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் இறந்த மூவர் மாத்திரமே வசித்து வந்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் ஒரே நாளில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளமை அப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |