வவுனியா கள்ளிக்குளம் கிராமத்தில் மூன்று வீடுகளில் திருட்டு
வவுனியா - கள்ளிக்குளம் கிராமத்தில் மூன்று வீடுகளில் மக்களை அச்சுறுத்தி திருடர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று (18.03.2023) இரவு வீடு புகுந்த திருடர்கள் இன்று (19.03.2023) அதிகாலை மூன்று மணிவரையிலும் மூன்று வீடுகளில் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று இரவு 11 மணியளவில் வயோதிபர் வசிக்கும் வீடு ஒன்றிற்குள் உள்நுழைந்த திருடர்கள் சிலர் காதில் அணிந்திருந்த தோட்டை கழற்றித்தருமாறு அச்சுறுத்தி பறித்துக்கொண்டு அருகில் இருந்த வீட்டிற்குள் குறித்த வயோதிபரையும் அழைத்துக்கொண்டு சென்று அவரின் குரலில் வீட்டில் வசித்தவர்களை அழைத்துள்ளனர்.

ஐந்து பவுன் தங்க நகை திருட்டு
கதவைத் திறந்தபோது அவ்வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் அவர்கள் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க நகைகளையும் பதினெட்டாயிரம் ரூபா பணம் என்பனவற்றை அங்கு திருடியுள்ளனர்.
அதன்பின் தொலைவிலுள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து அங்கிருந்த இரு சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்தி திருட்டில் ஈடுபட்டுள்ளனர். எனினும் இரண்டாவது வீட்டில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றபோது மாமடு பொலிஸாருக்கு கிராம மக்களினால் அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் சம்பவ இடத்திற்குப் பொலிஸார் வருகை தரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவர் மீது தாக்குதல்
இந்நிலையில் அதிகாலை நடந்த திருட்டு சம்பவத்தின் போது இரு சகோதரர்கள் மீது தாக்குதல் இடம்பெற்ற நிலையில் கிராம மக்கள் 119 க்கு அழைப்பு ஏற்படுத்தி முறையிட்ட பின்னரே இன்று அதிகாலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் காயமடைந்த இருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று வீடுகளிலும் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தின்போது திருடப்பட்ட தங்க நகைகளின் விபரம் சரியான மதிப்பீடு செய்யப்படவில்லை.
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri
இராணுவத்தைக் குவிக்கும் அமெரிக்கா... கப்பல்களில் எண்ணெய் நிரப்புவதை தீவிரப்படுத்தும் ஈரான் News Lankasri