எல்லை தாண்டிய கடற்றொழிலாளர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை
இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களில் 3 படகுகளின் படகோட்டிகளான மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 4 மில்லியன்ரூபா அபராதமும் விதி்க்கப்பட்டுள்ளது.
இதனை செலுத்த தவறின் மேலும் 3 மாதகாலம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான கடற்றொழிலாளர்கள்
அத்துடன் இவர்களுடன் கைதான மேலும் 9 பேரில் கடந்த டிசம்பர் 28ஆம் திகதி கைதான மூவரில் இருவருக்கு 2 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனையும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கைதான 9 பேரில் 7 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 1 வருட சிறைத்தண்டனையும் இன்று யாழ்.ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவானால் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

டிசம்பர் மாதம் 28ஆம் திகதியும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதியும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான கடற்றொழிலாளர்களுக்கு இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவளை நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் ஜனவரி 20 ஆம் திகதி கைதான 7 கடற்றொழிலாளர்களின் விளக்கமறியலை இம்மாதம் 17 ஆம் திகதிவரை நீடித்தும், ஜனவரி 2 ஆம் திகதி கைதான 11 கடற்றொழிலாளர்களின் விளக்கமறியலை இம்மாதம் 13 ஆம் திகதிவரை நீடித்தும் நீதவான் உத்தரவிட்டார்.