தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு - ஜீவன் தொண்டமான்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனையில், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலையீட்டிலும் அரசாங்கத்தின் ஏனைய தரப்பினரின் ஒத்துழைப்புடன் தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை அதிகரித்து, அந்த சம்பளத்தை இன்று வழங்க முடிந்ததாக ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஹட்டன், கொட்டகலையில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகள் மற்றும் சிறப்பு கொடுப்பனவுகளும் இ்நத ஆயிரம் ரூபாயுடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இந்த சம்பள அதிகரிப்பில் 900 அடிப்படையாகவும், வரவு செலவு திட்ட கொடுப்பனவாக 100 ரூபாயும் சேர்த்து 1000 ரூபா முழுமையாக வாங்கப்படுகிறது. இந்த 1000 ரூபாவே அடிப்படை சம்பளமாகக்கொண்டு பிரசவ கால கொடுப்பனவு ஏனைய சலுகைகளும், வழங்கப்படும்.
மேலும் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிக்கையின் பிரகாரம் 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் .ஒரு சில தோட்ட நிர்வாகங்கள் தேயிலை பறிக்கும் அளவை அதிகரித்தமை, இது தொடர்பாக எங்களது கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து நேற்றைய முன்தினம் பெருந்தோட்டங்களின் நிறைவேற்று அதிகாரிகளுடன் கலந்துரையாடி சாதகமான தீர்வு எட்டப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.