போராட்டக்களத்தை வழிநடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்! நாமல் ராஜபக்ச
போராட்டக்களத்தை வழிநடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சமூகமயப்படுத்தும் வேலைத்திட்டம்
அத்துடன் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய இளைஞர்களை சமூகமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்று அவசியம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
வெலிமடை - நுகதலாவையில் பொதுஜன பெரமுன கட்சியின் மறுசீரமைப்பு கூட்டங்கள் நேற்றைய தினம் (30.09.2022) இடம்பெற்றிருந்தது.
இந்த கூட்டங்களில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பிழையான விடயம்
இந்த சந்தர்ப்பத்தில் போராட்டக்காரர்களுக்காக புனர்வாழ்வு பணியகங்களை அமைக்கும் திட்டம் உள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், போராட்டக்களத்துடன் தொடர்புடைய அப்பாவி இளைஞர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.
அவர்களை சிறையில் அடைத்து, தடுத்து வைத்து குறைந்தபட்சம் வேலையொன்றையேனும் பெற்றுக் கொள்ள முடியாதவாறான சூழலை ஏற்படுத்துவது பிழையான விடயமாகும் என குறிப்பிட்டுள்ளார்.