ஆடைத்தொழிற்சாலை திறந்தால் விளைவுகளை பொறுப்பு வாய்ந்தவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் - ரவிகரன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை திறக்கப்படுவதால், ஏற்படப்போகும் சகல விளைவுகளையும் உரிய பொறுப்பு வாய்ந்தவர்களே ஏற்றுக்கொள்ளவேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் மிகப் பாரிய அளவில் கோவிட் தொற்று ஏற்பட்டமையினால் தொழிற்சாலை கடந்த மாதம் மூடப்பட்டிருந்தது.
இவ்வாறு மூடப்பட்டிருந்த ஆடைத் தொழிற்சாலை 07.06.2021 நாளை மீளத் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும், வெளி மாவட்டத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் 10பேருக்கு கடந்த மாதம் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவ்வாறு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொண்ட 10பேரில், 06பேருக்கு கோவிட் தொற்று இருப்பதாகப் பரிசோதனை முடிவுகள் வெளியாகியிருந்தன.
அதனைத்தொடர்ந்து அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கும் கோவிட் தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மே - மாதம் 17ஆம் திகதி குறித்த புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டிருந்தது.
அதனையடுத்து அங்கு பணியாற்றியவர்கள் சகலருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது மிக பாரிய அளவில் அதிகரித்திருந்தது.
இதனால் குறிப்பிட்டளவு காலம் முல்லைத்தீவு, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பல பொலிஸ் பிரிவுகளும் முடக்கப்பட்டிருந்தன. இவ்வாறாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர், மிக அதிகளவில் அதிகரிக்கக் காரணமாக இருந்த இந்த ஆடைத் தொழிற்சாலையினை 07.06.2021 நாளையதினம் மீளவும் திறக்க இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.
இது தொடர்பாகப் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும், புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள புத்திஜீவிகள் எனப் பலரும் என்னுடன் தொடர்புகொண்டு தெரியப்படுத்தியிருந்தனர். எனவே இது தொடர்பிலே நான் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதன் மற்றும், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உமாசங்கர் உள்ளிட்டவர்களுடன் தொடர்புகொண்டுபேசியிருந்தேன்.
உரிய வகையில் சுகாதார விதிமுறைகள் பேணப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டே குறித்த ஆடைத்தொழிற்சாலையினைத் திறக்கவிருப்பதாக அவர்களால் என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை தொடர்ச்சியாக அங்கு இடம்பெறும் நடவடிக்கைகளைச் சுகாதாரத் தரப்பினர் கண்காணிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த சூழ் நிலையில் குறித்த ஆடைத் தொழிற்சாலையினைத் திறப்பது மிக ஆபத்தானதென அங்குள்ள புத்திஜீவிகளும் மக்களும் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு ஆடைத் தொழிற்சாலையினை மீளத் திறப்பதனை அவர்கள் விரும்பவில்லை. அத்தோடு ஏற்கனவே குறித்த ஆடைத் தொழிற்சாலையில் முறையாகச் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளை முடக்க வேண்டியிருந்திருக்காது.
சாதாரண கூலித் தொழிலாளர்கள் தொடக்கம் அனைவருடைய
வாழ்வாதாரமும் இவ்வாறு முடக்கப்பட்டிருக்காது.
எனவே இந்நிலையில் குறித்த ஆடைத் தொழிற்சாலை மீளத் திறக்கப்படுமானால், அதனால்
ஏற்படும் சகல விளைவுகளையும், இதனோடு தொடர்புடைய பொறுப்பு வாய்ந்தவர்களே
ஏற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.