எம்மை அழித்த இந்த அரசு நாட்டை சீன காலனித்துவ நாடாக மாற்றி வருகின்றது! - தவராசா கலையரசன்
Alliance சீன அரசின் அனுசரணையோடு எம்மை அழித்த அரசு நாட்டை சீன காலனித்துவ நாடாக மாற்றி வருகின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
இன்று நண்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரணி குறித்து என்னிடம் வாய்மொழி மூல முறைப்பாட்டினை பெற்றுச் சென்றுள்ளனர்.
இந்த நாட்டில் ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள், சிவில் அமைப்புக்களினாலும் பூர்வீக குடிகளின் மீது பெரும்பான்மை சமூகம் தமிழ்ச் சமூகத்தின் கலை கலாச்சார விடயங்களில் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக மக்களின் உணர்வு, உரிமை ரீதியான பேரெழுச்சியாகவே பார்க்கின்றேன்.
இதில் அரசாங்கத்திற்கு ஒரு விடயத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். தங்களுடைய பூர்வீக நிலங்களில் நிம்மதியாக வாழ விட வேண்டும் என்பதை உணர்வுப்பூர்வமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
இதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொள்ளாமல் மக்கள் பிரதிநிதிகளாகிய எம்மை துன்புறுத்தும் வேலையை அரசு மேற்கொள்கின்றது. அவ்வாறு தொடர்ந்தும் இருக்க முடியாது. இந்த நாட்டில் ஜனநாயகம் , சுதந்திரம் குறித்துப் பேசுகின்றனர். ஆனால் சிறுபான்மை சமூகமாகவுள்ள எங்களுக்கு நீதி சுதந்திரம் கிடைக்கப்பெறுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.
எங்கு சென்றாலும் தமிழர்கள் தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் இந்த அரசுகளால் நசுக்கப்படுகின்ற சூழல்தான் இருக்கின்றது.
இந்நிலை மாறவேண்டும். இந்த நாட்டின் தலைவர் அனைத்து மக்களுக்குமான தலைவர் என்பதனை மறந்து பௌத்த மக்களுக்குத் தான் தலைவர் என்ற வகையில் பௌத்த தேரர்களின் சொற்படியே ஆட்சி செய்வேன் என்ற வகையில் கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதனை நோக்கும் போது ஜனாதிபதியால் தமிழ் பேசும் சமூகம் வேறாகத்தான் பார்க்கப்படுகிறது.
இங்கு நிலையான சமாதானமும் இல்லை, சமத்துவமும் இல்லை என்பதனை ஒவ்வொரு விடயத்திலும் சுட்டிக்காட்டி முடியும். அரசியல் அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு போன்ற விடையங்களில் வேறுபட்ட சிந்தனையுடன் தான் செயற்படுகின்றனர்.
தொடரான சமாதானத்தை ஏற்படுத்த இந்த அரசாங்கம் முன்னெடுப்புக்களையும் ஏற்படுத்தவில்லை என்பதனை அவர்களது கடந்த கால செயற்பாடுகள் காட்டிக்கொண்டு இருக்கின்றது.
தமிழர்களின் நீண்ட கால பிரச்சினைகளில் அரசாங்கம் எந்தவொரு தீர்வையும் நோக்கி நகரவில்லை என்பதனை இந்தியா அடிக்கடி இலங்கை அரசினை கண்டிப்பதன் காரணமாக இன்று அரசு இந்தியாவைக் கூட வஞ்சித்துள்ளது.
இலங்கையில் தற்போது சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாகக் கொழும்பு, யாழ். தீவக பகுதிகளைக் கூட சீன அரசுக்குத் தாரை வார்த்திருக்கும் விடயம் இந்த நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும்.
ஏனென்றால் இந்தியா நேச நாடு . யுத்த காலத்தில் இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்கியிருந்தாலும் சீனா மிக மோசமான ஆயுதங்களை வழங்கி அவை பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்று சீனமொழி பொறிக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் கூட காட்சிப்படுத்தப்படுகின்றது. சீன ஆதிக்கத்திற்கு உட்பட்ட காலனித்துவ நாடாக மாறிவருகின்றது. இது பாரிய ஆபத்தினை இலங்கைக்கு ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.



