திலினி பிரியமாலி பாணியில் 2 ஆயிரம் கோடி ரூபா மோசடி
பல்வேறு தரத்தில் இருக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை தந்திரமான முறையில் ஏமாற்றி இணையத்தளம் வழியாக சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
40 முதல் 80 வீதம் வட்டி தருவதாக கூறி மோசடி
நூற்றுக்கு 40 வீதம், 80 வீதம் வரை மிகப் பெரிய வட்டி வழங்கப்படும் என கூறி நாட்டின் பல பகுதிகளில் கருத்தரங்குகளை நடத்தி இரண்டு வருட காலத்தில் இந்த பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த பண மோசடியில் பாடசாலை அதிபர்கள், பாதுகாப்பு தரப்பு பிரதானிகள், பௌத்த பிக்குகள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள் உட்பட 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இணையத்தளம் வழியாக நடக்கும் நிதி மோசடிகள் அதிகரிப்பு
நாட்டில் நிலவும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் இணையத்தளம் வழியாக நடக்கும் நிதி மோசடிகள் துரித கதியில் அதிகரித்துள்ளது. சில நபர்கள் லட்சக்கணக்கான பணத்தை வங்கிகளில் கடனாக பெற்று அதனை அதிகமான இலாபம் பெறும் நோக்கில் இணையத்தளத்தில் மோசடியில் ஈடுபடும் நபர்களுக்கு வழங்கியுள்ளனர்.
வட்ஸ் அப், முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி மிகவும் தந்திரமான முறையில் இணையத்தளம் வழியாக மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அந்த சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.