இலங்கையில் 5 ஆண்டுகளில் கால் பதிக்க இடமிருக்காது - சமீர பெரேரா
அரசாங்கம் இரண்டு வருடங்களில் விற்பனை செய்துள்ள நாட்டின் சொத்துக்களுக்கு அமைய 5 ஆண்டுகள் செல்லும் போது கால் பதிக்க இடம் இல்லாமல் போகும் என ஐக்கிய பிரஜைகள் அமைப்பின் பிரதிநிதி சமீர பெரேரா (Sameera Perera) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் கூறுவது போல், சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் நடைபயிற்சி பாதைகள் அமைக்கும் போது மக்கள் வீதியில் இறங்கவில்லை.
எனினும் அபிவிருத்தியடைந்து வரும் நாடான இலங்கையில் எதிர்ப்புகள் முன்வைக்கப்படுகின்றன. இலங்கை சிங்கப்பூரை போன்று வணிக நகரமோ, வர்த்தக நகரமோ இல்லை என்பதால், மக்கள் வீதியில் இறங்குகின்றனர்.
நாட்டு மக்கள் நாட்டின் சம்பிரதாயங்களையும் உரிமைகளை துடைத்தெறிய தயாரில்லை. இதனை ஆட்சியாளர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
பராக்கிரம சமுத்திரத்தின் ஓரங்களை உடைத்து நடைபயிற்சி பாதைகளை நிர்மாணிப்பது தேசப்பற்றல்ல என்பது உணர்ந்துக்கொள்ள வேண்டும் எனவும் சமீர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.