சமஷ்டியை விடுத்து வேறு எந்த தீர்வுக்கும் ஆதரவில்லை: சுகாஷ் திட்டவட்டம்
இலங்கை ஜனாதிபதி சர்வதேச ஆதரவைப் பெறுவதற்காகவும் பொருளாதார ரீதியாக சீர்குலைந்திருக்கின்ற நாட்டினைக் காப்பாற்றுவதற்காகவும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண்பது போல ஒரு நாடகத்தினை ஆடுவதற்கு முற்படுகின்றார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
சமஷ்டி முறை
வட்டுக்கோட்டை அலுவலகத்தில் நேற்று (26.11.2022) நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சமஷ்டிக்கு குறைந்த எந்தவிதமான தீர்வுகளையும் நாங்கள் ஏற்பதற்கு தயாராக மாட்டோம் என்ற செய்தியை முன்வைத்து, ரணில் விக்ரமசிங்க ஒற்றையாட்சியைத் தாண்டிய சமஷ்டியை பற்றிப் பேசுவதற்கு தயாராக இருந்தால் மாத்திரம் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு தயார் என்ற அறிவிப்பை விடுவது தான் இந்த நேரத்தில் உசிதமாக இருக்கும்.
இனப்பிரச்சினை
மாறாக, நிபந்தனைகளை முன்வைக்காது ரணிலுடன் பேசச் செல்வது என்பது அரசாங்கத்துடைய நாடகத்தில் நாங்களும் பங்காளிகள் ஆவதை குறித்துவிடுமே தவிர இது தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு எந்தவிதமான தீர்வினையும் தந்துவிடப்போவதில்லை. அரசாங்கத்தினுடை நாடகத்தில் நாங்கள் நடிகர்களாக இருக்க முடியாது.
ரணில் ராஜபக்சகளை காப்பாற்ற வேண்டிய தேவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு கிடையாது.
சமஷ்டி பற்றி பேசுவதற்கு தயார் என்றால் நாங்களும் தயார். சமஷ்டிக்கு குறைந்த எந்தவிதமான தீர்வுகளையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்காது.
மேலும், வியட்நாமில் இறந்த, யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை சேர்ந்தவரது உடல் பாதுகாப்பான
முறையில் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க
வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.