மயிலத்தமனை தொடர்பில் நீதிமன்ற பணிப்புரையென்பது ஏதுமில்லை :அனுராதா ஜகம்பத்
மயிலத்தமடு-மாதவனை தொடர்பில் நீதிமன்ற பணிப்புரையென்பது எதுவுமில்லை.அப்பகுதியில் பண்ணையாளர்களின் செயற்பாடுகளினாலேயே மாடுகள் சுடப்படும் நிலைமை காணப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்றையதினம் (27.04.2023) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், என்னை கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்தது ஜனாதிபதி. அதே நேரத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பதவியில் இருந்து நீக்குவதும் ஜனாதிபதி தான். ஆகவே அது அவரது முடிவு எனவும் தெரிவித்துள்ளார்.
கால்நடை மேய்ச்சல் பிரச்சினை
மாதவனை- மயிலத்தமடு மேய்ச்சல் பிரச்சினையானது சில வருடங்களாக இருக்கின்ற ஒரு பிரச்சினை உண்மையிலேயே கால்நடைகள் 100, 200ற்கும் மேற்பட்ட கால்நடைகளை வைத்திருப்பவர்கள் பிரச்சினையாகத்தான் இந்த பிரச்சினை இருக்கின்றது.
மேலும், தங்களது கால்நடைகளை பாதுகாக்க தெரியாதவர்களினால் தான் இந்த பிரச்சினை வருகின்றது. அந்தப் பிரதேசத்தில் சிலர் பயிற்செய்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
அங்கு 200ற்கும் அதிகமான கால்நடைகளை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் திறந்து விடுகிறார்கள் இதனால் தான் இந்த பிரச்சினை உருவாகி இருக்கின்றது.
நாங்கள் ஒரு புதிய திட்டத்தின் ஊடாக விவசாயிகளையும் கால்நடைகளையும் பாதுகாப்பதற்கான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தோம்.
மேற்குறித்த கால்நடைகள் வைத்திருப்பவர்கள் மற்றும் கால்நடைகள் விவசாய நிலங்களுக்குள் செல்லாமல் அதை பாதுகாப்பாக வேலி அடைத்து அதனை பாதுகாக்கவும் அதற்கான உணவுகளை வெளியிடங்களில் இருந்து எடுத்துக் கொண்டு வந்து அதற்கு வழங்கக்கூடியவாறு அந்த செயற்றிட்டத்தை நாங்கள் உருவாக்கி இருந்தோம்.
பண்ணையாளர் கவனயின்மை
இதேவேளை பண்ணையாளர்கள் இது சம்பந்தமாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் கால்நடைகளுக்கு சரியான முறையில் நீர் வழங்குவதில்லை, சாப்பாடுகள் வழங்குவதில்லை, கட்டாக்காலியாக அவற்றினை பொது வெளியில் திறந்து விடுகின்றனர்.
இதனால் அங்கு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு பயிற்செய்கையிலும் ஈடுபடும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள்.
குறித்த இந்த நடவடிக்கை ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நாங்கள் பாரிய நடவடிக்கைகளை திணைக்களங்கள் ஊடாக நடைமுறைப்படுத்த நினைக்கின்றோம்.
இந்த பயிற்செய்கைக்காக அவர்களுக்கு மில்லியனுக்கும் அதிகமான பணங்களை நாங்கள் வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தையும் நாட்டின் அபிவிருத்திக்கும் ஏற்ற நடைமுறைகளை நாங்கள் முன்னெடுத்து கொண்டு வருகின்றோம் .
ஆனால் இந்த 200 தொடக்கம் 300 மாடுகளை வைத்திருப்பவர்கள் ஒன்றே யோசிக்க வேண்டும்.
சமுதாயத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் தங்களது கால்நடைகளை எவ்வாறு பாதுகாக்கலாம் என்று அவர்கள் சிந்திக்க வேண்டும்.
நீதிமன்ற நடவடிக்கை
இதற்கமைய அவர்கள் ஒரு பண்ணையை அமைத்து அந்த பண்ணைக்குள் அந்த கால்நடைகளை அடைத்து பராமரித்து அதனூடாக இலாபம் அடைய முயற்சிக்க வேண்டும். அவர்கள் இலாபம் அடைவதை மட்டும் தான் முயற்சிக்கின்றார்கள்.
அத்துடன் அந்த கால்நடைகளை பாதுகாக்கவும் அதற்கான நல்லவிதமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அவர்கள் முனைவது இல்லை.
ஆகவே இந்த கால்நடையாளர்களின் பிரச்சினைகள் கால்நடைகளுக்கு இருக்கின்றது என்பது தொடர்பாக நாங்கள் உடன்பட போவதில்லை என்றார்.
கேள்வி இந்த மாதவனை - மயிலத்தமடு தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகள் இருக்கின்றது நீதிமன்றம் இதற்கான தடை உத்தரவு இருக்கின்றது என்று கேட்டதற்கு பதிலளித்த ஆளுநர், இல்லை இல்லை எனக்கு தெரியாது அப்படி ஒன்று இல்லை.அவ்வாறு ஒன்று இருப்பது எனக்கு தெரியது என தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இயந்திர படகுப்பாதைக்கு பணம் கட்டுவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆளுநர், உண்மையிலேயே ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரல் என்று தான் நான் கூற வேண்டும்.
பொருளாதார நெருக்கடி
இன்று நாடு உள்ள பொருளாதார நெருக்கடியில் நாங்கள் ஒருவரிடம் 10 ரூபாவும் துவிச்சக்கர வண்டிக்கு 20 ரூபாயவும் மோட்டார் சைக்கிளுக்கு 40 ரூபாயவும் தான் அறவிடுகின்றோம்.
இவ்வளவு காலமும் நாங்கள் இலவசமாக வழங்கிய சேவை. இன்று மாகாண சபைக்கு நிதி பற்றாக்குறை இருக்கின்றது.48 மில்லியன் ரூபாய் நிதி இதற்காக செலவாகின்றது.
ஆகவே இன்றைய நிதி இல்லாத நிலையில் இந்த பாதைக்கு ஒரு சிறியதொரு பணத்தை அறவிடுவதை ஒரு அரசியலாக்கி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றம் வரை சென்று இந்த விஷயத்தை அரசியலாக்கி கொண்டிருக்கின்றார்.
உண்மையிலே ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.நாங்கள் கடந்த காலங்களில் இந்த பாதையை இலவசமாக வழங்கியிருந்தோம். சீசன் டிக்கெட் கொடுத்திருந்தும் பல விடயங்கள் இலவசமாக வழங்கி இருந்தோம்.
ஆனால் இன்று நாட்டில் பணம் தேவை என்ற காரணத்தினால் நாங்கள் இந்த சிறியதொரு தொகையை வழங்க வேண்டும் என்று நாங்கள் தெரிவித்திருக்கின்றோம் ஆகவே இதை அரசியல் ஆக்க வேண்டாம்.
ஏனென்றால் இன்று மாகாண சபைகளில் பணம் இல்லை பணம் இருந்தால் 48 மில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது.
அந்த பணத்தை எங்களது மாகாணங்களுக்கு வழங்கிவிட்டு இலவசமாக இந்த பாதையை செல்வதற்கு அனைவரும் முன்வரவேண்டும்.
மேலும் இந்த விடயங்களில் நாங்கள் சரியாக கலந்து ஆலோசித்துதான் இந்த முடிவை எடுத்திருக்கின்றோம். ஆகவே இதை அரசியல் ஆக்க வேண்டாம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri
