கண்டி - திருகோணமலை பேருந்தில் இளைஞனிடமிருந்து தங்க ஆபரணம் திருட்டு
கண்டியிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் வைத்து இளைஞரொருவரிடமிருந்து சூட்சுமமான முறையில் தங்க ஆபரணம் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை சமாதி வீதியில் வசிக்கும் பி.நிதர்ஷன் என்ற 20 வயதுடைய இளைஞன் பேராதனையிலிருந்து திருகோணமலையிலுள்ள தனது வீட்டுக்கு செல்லும்போதே பேருந்தில் வைத்து இத்திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த, இளைஞனின் ஆசனத்துக்கு அருகில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் அமர்ந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் இளைஞரும் குறித்த நபரும் நட்பு ரீதியாக பேசிக் கொண்டு வந்த போது, அந்த நபர் தன்னை பிஸ்கட் சாப்பிடுமாறு வற்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அருந்துவதற்கு தண்ணீர் போத்தலையும் அந்த நபர் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இளைஞன் மயக்கமுற்றுள்ள நிலையில் அவரின் கழுத்திலிருந்த 2 பவுண் தங்க சங்கிலி திருடிச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மயக்கமுற்ற இளைஞன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை
திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.