மட்டக்களப்பு வைத்தியசாலையில் திருட்டில் ஈடுபட்ட இளைஞருக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் கையடக்க தொலைபேசி மற்றும் பணப்பை என்பவற்றை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இக்கொள்ளை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வைத்தியசாலையில் 22 வது விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த இருவரின் கையடக்க தொலைபேசி இரண்டு திருட்டு போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் அங்கு இரவில் சென்று வந்த இளைஞர் ஒருவர் மீது சந்தேகம் கொண்டு அது தொடர்பாக வைத்தியசாலை பொலிஸாரிடம் அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் குறித்த இளைஞனை வெள்ளிக்கிழமை (13) கைது செய்து மட்டு தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இளைஞன் ஏறாவூர் தக்காநகர் வீதியைச் சோந்த 24 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது.
உறவினர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் அவர்களுக்கு உதவிக்கு இரவில் நிற்க வேண்டும் என தெரிவித்து வைத்தியசாலைக்குள் உட்சென்று அங்கு விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுடைய கைதொலைபேசிகள், கைபை என்பவற்றை கொள்ளையடித்து வந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞனிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 2 கையடக்க தொலைபேசிகள், தேசிய அடையாள அட்டை இரண்டு, வங்கியில் பணம் பெறும் ஏ.டி.எம் இயந்திர அட்டை 9, இரண்டு சாரதி அனுமதிப்பத்திரம், 3 ஆயிரத்து தொள்ளாயிரம் ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சந்தேகநபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் நேற்று முன்னிலைப்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி, றொசாறியே வீதியில் எரிவாயு கொள்கலன், துவிச்சக்கரவண்டிகளை திருடிவந்த இரண்டு பேரை பொலிஸார் இன்று (15) கைது செய்துள்ளனர்.
கூளாவடி பிரதேசத்திலுள்ள கடை ஒன்றின் முன்னால் இருந்த எரிவாயு கொள்கலன் ஒன்று கடந்த 5 ம் திகதி திருட்டுப் போயிருந்தது. இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடி கமராவின் காட்சிபதிவுகளின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் எரிவாயு கொள்கலன் ஒன்றை திருடிச் சென்ற நெல்லிக்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரை இன்று கைது செய்ததுடன் திருடப்பட்ட எரிவாயு சிலிண்டர் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டர் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளனர்.
இதேவேளை றொசாறியே வீதியில் கடந்த 13ம் திகதி துவிச்சக்கரவண்டி ஒன்று திருடப்பட்ட சம்பவத்தில் ஏறாவூர் லங்காமாத வீதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 4 துவிச்சக்கரவண்டிகளை மீட்டுள்ளனர்.
இதன்போது மீட்கப்பட்ட துவிச்சக்கரவண்டிகளில் இரண்டு துவிச்சக்கரவண்டிகளின் உரிமையாளர்கள் அதனை அடையாளம் காட்டியுள்ளதாகவும் இரண்டு துவிச்சக்கரவண்டிகள் அடையாளம் காணப்படாமல் உள்ளது.
எனவே துவிச்சக்கரவண்டி திருட்டுபோனவர்கள் பொலிஸ் நிலையம் சென்று அடையாளம் காட்டி பெற்றுக் கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவ்விரு கொள்ளைச் சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.