கடற்தொழிலாளர்களுக்கான நலத்திட்டத்தை குழப்ப விரும்புகின்றார்களா: அண்ணலிங்கம் அன்னராசா கேள்வி (video)
கடற்தொழிலாளர் சமூகத்தின் முன்னேற்றம் தொடர்பில் வடமாகாண ஆளுநரிடம் நாம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பாடசாலையில் இருந்து இடை விலகிய கடற்தொழிலாளர் மாணவர்களின் விவரங்கள் கோரப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அண்ணலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (06.11.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலைகளில் கடற்தொழில் சமூகங்களைச் சார்ந்த மாணவர்களின் விவரங்கள் கோரப்படுவது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீபன் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
கடற்தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள்
அவர் அவ்வாறான கருத்தை முன்வைப்பதற்கு முன்னர் கடற்தொழிலாளர் சமூகங்கள் சார்ந்த அமைப்புக்களுடன் கலந்துரையாடி குறித்த கருத்தை தெரிவித்திருக்க வேண்டும்.
கடற்தொழிலாளர் சமூகம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் நாம் பலரிடம் எமது சமூகம் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்தோம்.
கடற்தொழிலாளர் சமூகம் பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலையில் இருந்து இடை விலகி தமது பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு விலகியவர்களுக்கு தொழில் பயிற்சியை (NvQ) தரம் 2 சான்றிதழை பெற்று கொடுப்பதற்காக வட மாகாண ஆளுநரிடம் கோரிக்கையை முன்வைத்தோம்.
அதன் பயனாக பாடசாலைகளில் இருந்து இடை விலகிய கடற்தொழிலாளர் சமூகத்தை சேர்ந்த மாணவர்களின் விவரங்களைப் பெறுவதற்கு ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சத்துணவு திட்டம்
அதனை குழப்பும் விதமாக ஒரு சமூகம் சார்ந்த மாணவர்களின் விவரங்களை எடுப்பது பிழை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் கருத்து தெரிவிப்பது பாதிக்கப்பட்ட சமூகம் மீண்டெழுவதை தடுப்பதாகும்.
அது மட்டுமல்லாது எமது சமூகத்தில் போசாக்கு குறைந்த சிறுவர்கள் அதிகமாக இனம் காணப்பட்ட நிலையில் அவர்களுக்கான சத்துணவு திட்டத்தை வழங்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தோம்.
கல்வியை கற்பதற்கான தனியார் கல்வி நிலையங்கள்
இவ்வாறான நிலையில் அரசியல் காரணங்களுக்காகவா கடற்தொழிலாளர் சமூகங்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற நலத் திட்டங்களை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் குழப்புகிறார் என எண்ணத் தோன்றுகிறது.
இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம் கடற்தொழிலாளர் சமூகம் வாழ்கின்ற கரையோர பிரதேசங்களில் மேலதிக கல்வியை கற்பதற்கான தனியார் கல்வி நிலையங்கள் கிடையாது.
கரையோர பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு பாடசாலைகளில்
தொண்டு அடிப்படையில் மாலை நேர வகுப்புகளை நடத்த முன் வாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.