கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேற வேண்டும்! பழனி திகாம்பரம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுக்க முடியாவிட்டால் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அனைவரும் இணைந்து போராடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஹட்டன், மல்லியப்பு சந்தியில் இடம்பெற்றிருந்தது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சோ.ஶ்ரீதரன், இளைஞர் அணித் தலைவர் பா. சிவநேசன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்ற உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும். அதனை நோக்கியே பேச்சுவார்த்தை தொடர வேண்டும்.
அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா இல்லையேல் கையொப்பமிடமாட்டேன் என்று வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். அவரின் அறிவிப்பை வரவேற்கின்றோம்.
அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா இல்லையேல் ஏனைய தொழிற்சங்கங்களும் வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியில் வந்தால் அனைவரும் இணைந்து போராடலாம் என குறிப்பிட்டுள்ளார்.





