ஜனாதிபதியை மற்றுமொரு தினத்தில் கூட்டமைப்பு சந்திக்கும் - சசீந்திரன்
புதிய அரசியலமைப்பு யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைமைகளுக்கும் இடையிலான சந்திப்பு பிற்போடப்பட்டிருக்கிறதே ஒழிய சந்திப்பு தவிர்க்கப்படவில்லை என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் செயலாளர் கணேசமூர்த்தி சசீந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று ஜனாதிபதிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைமைகளுக்கும் இடையில் ஏற்பாடாகியிருந்த சந்திப்பானது இறுதி நேரத்தில் இரத்தாகியுள்ளமை தொடர்பில் இன்று (16) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே மட்டக்களப்பு வாலிபர் முன்னணியின் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
புதிய அரசியலமைப்பு வரைபு தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற ரீதியில் எங்களது கட்சியின் யோசனைகளைக் கடந்த வருட இறுதி பகுதியில் புதிய அரசியலமைப்பு வரைபு குழுவிடம் கையளித்திருந்தோம்.
அது முதலாம் கட்ட நடவடிக்கை, அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட நடவடிக்கையாக புதிய அரசியலமைப்பு வரைபு நிபுணர் குழுவை எமது தலைமைகள் சந்தித்திருந்தது. அதன் நிமிர்த்தமாக மூன்றாம் கட்ட நடவடிக்கையாக புதிய அரசியலமைப்பு யோசனைகள் தொடர்பாக இந்த நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதியை சந்திப்பதற்காக ஒழுங்குகள் நடைபெற்றிருந்தது.
குறித்த சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்தாகியுள்ளது. சந்திப்பு பிறிதொரு தினத்திற்கு பிற்போயுள்ளதே தவிர வேறேதுமில்லை ஜனாதிபதி செயலகம் இன்னுமொரு தினத்தில் எமது தலைமைகளை ஜனாதிபதி சந்திப்பதாகக் கூறியுள்ளது.
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே என்ற அந்த நிலையிலே தான் இந்த சந்திப்பு நிகழவிருந்தது என்பது மறுக்கவியலாது.
அந்த வகையில் ஜனாதிபதியுடனான சந்திப்பு நிகழ்ந்திருந்தால் நிச்சயமாக ஆரோக்கியமான முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கான சூழல் ஏற்பட்டிருக்கும்.
தொடர்ந்து எமது
தலைமைகள் ஜனாதிபதியுடன் எம் மக்களின் அபிலாஷைகள் மற்றும் தேவைகளை
நிறைவேற்றுவதற்காகப் பேச வேண்டும் பேசுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.