சுன்னாக கொலை முயற்சி சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்கள் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தகவல்
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் கொலை முயற்சி சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர்கள் மூவர் சுன்னாகம் பொலிஸில் சரணடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சுன்னாகத்தில் நேற்று முன்தினம் (24.01.2023) இரண்டு குழுக்கள் இணைந்து காரில் பயணித்த நபரை வாகனம் ஒன்றினால் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
விபத்தின் பின்னர் காருக்கு பெட்ரோல் ஊற்றி தீவைக்கவும் திட்டமிடப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சட்டத்தரணி மூலம் மூவரும் சரணடைந்தனர்
சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான ஜெகன் என்ற நபர் வவுனியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடிருந்தனர்.
அத்துடன், சந்தேகநபரின் குழுவில் உள்ளவர்கள் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலைத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டில் ஜெகன், ரஞ்சித் மற்றும் முத்து என்றழைக்கப்படும் மூவர் வவுனியாவில் தலைமறைவாகியிருந்தனர்.
இந்த நிலையில், நேற்றைய தினம் சட்டத்தரணி மூலம் அவர்கள் மூவரும் சரணடைந்துள்ளனர்.
மேலும், குறித்த நான்கு பேரும் தாக்குதல் சம்பவத்தோடு தொடர்புபட்டுள்ளதாகவும், அவர்களை விரைவில் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.