பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் போராட்டம் தொடரும் – ஸ்டாலின்
பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் போராட்டம் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
கல்வி அமைச்சின் செயலாளர் நகைச்சுவையூட்டும் கதைகளை கூறுகின்றார். பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஆசிரியர், அதிபர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரீட்சைகளை நடாத்துதல், அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை நடாத்துதல், பாடசாலைகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் முன்னதாக சம்பள பிரச்சினை குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு கிடைக்கும் என்பதில் என்ன நிச்சயம்.
எனவே பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் சம்பள முரண்பாட்டுப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டம் வழங்கப்படாவிட்டால் பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்படும் என்பதனை இந்த அரசாங்கத்திற்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம் என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.