யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நள்ளிரவை தாண்டி தொடரும் போராட்டம்! படையினர் குவிப்பு
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த நினைவுத் தூபி இன்று இரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதன் போது பல்கலைக்கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பாதுகாப்புத் தரப்பு உட்பட்ட பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே குறித்த தூபி இடிக்கப்பட்டதாக யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா அறிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பல்கலைக்கழக வளாகத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் சுற்றி ஆயுதம் ஏந்திய அதிரடி படையினர், இராணுவத்தினர், பொலிஸார் குவித்துள்ளனர். இதனால் எந்நேரத்திலும் குழப்பம் ஏற்படலாம் என்ற பதற்றத்துடன் போராட்டம் நள்ளிரடை தாண்டி தொடருகிறது.
போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு கூடியுள்ளனர்.
குறித்த பகுதியில் கலகம் அடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.







