பட்டினிச் சாவை எதிர்நோக்கவுள்ள இலங்கை மக்கள்! ரோஹினி ஆதங்கம்
அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தூங்கிக் கொண்டிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
வர்த்தகர்கள் தாம் விரும்பிய விலைக்கு பொருட்களை விற்பணை செய்வார்களாயின் அரசாங்கமும் அமைச்சரவையும் எதற்கு என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நாட்டில் இதே நிலைமை தொடருமாயின் கோவிட் தொற்றினால் மாத்திரமின்றி மக்கள் பட்டினியால் சாகும் நிலைமையும் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விலைகளில் சீனி விற்பனை செய்யப்படுவது எவ்வாறு? வரிகுறைப்பின்போது இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் விலை எதற்காக சரமாரியாக அதிகரிக்கப்படுகிறது? வரி சலுகையின் மூலம் நுகர்வோருக்கு நன்மை கிடைத்ததா?
நாட்டில் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றபோது நுகவர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நித்திரையிலுள்ளது.
வர்த்தகர்கள் தாம் விரும்பிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்வார்களாயின் அரசாங்கமும் அமைச்சரவையும் எதற்கு? நுகவர்வோர் அலுவல்கள் அதிகாரசபை எதற்கு?
இவ்வாறு பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவது ஜனாதிபதிக்கும் தெரியாது என்று கூறுகின்றனர். தற்போது அரசாங்கமும் நிதி அமைச்சும் அதன் சகாக்களுக்கு வரி சலுகையை வழங்கும் தானசாலைகளாகவே உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.