விமானப்படை வீரர் ஒருவரின் பதிவுக்கு இலங்கை விமானப்படை மறுப்பு
இலங்கை விமானப்படைக்கு அடிமையாக இருக்க விரும்பவில்லை என்று கூறியதாக கூறப்படும், விமானப்படை வீரர் ஒருவர் தனது எட்டு வருட ஆரம்ப பணி காலத்தை முடித்துக்கொண்டு விமானப்படையை விட்டு வெளியேறியவர் என்று, இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படையில் சேவையாற்றிய அசங்க ஸ்ரீமால் என்ற விமானப்படை வீரர், “நான் இலங்கை விமானப்படைக்கு அடிமையாக இருக்க விரும்பாததால், நான் விலகுகிறேன்” என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எனினும் அவர் தனது எட்டு வருட பணியை முடித்துக்கொண்டு,2022, ஜூலை 21ஆம் திகதி அன்று விமானப்படையை விட்டு வெளியேறியதாக விமானப்படையின் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலம் தெரிவிக்கையில்,
“ஒரு விமானப்படை உறுப்பினர் பொதுவாக தனது சொந்த விருப்பத்தின்படி 22 ஆண்டுகள் வரை சேவை செய்ய உரிமையுடையவர்.
இருப்பினும், சேவையின் நீடிப்பை முடிவு செய்யும் உரிமை விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விமானப்படை வீரர் கட்டுகுருந்த விமானப்படை நிலையத்தில், தனது கடைசி சேவைக் காலத்தில் நிதி மோசடிகளுக்காக இரண்டு சந்தர்ப்பங்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
இதன் காரணமாக அவருடைய சேவை நீடிப்பை அங்கீகரிக்க இயலாது என்ற காரணத்தால், அவர் அதிகாரப்பூர்வமாக விமானப்படையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
எனவே, சேவையில் ஏற்பட்ட விரக்தி மற்றும் அதிருப்தியே அவரை பதவி விலக
வழிவகுத்தது என்று கூறுவது அடிப்படையற்றது“ என்றும் குரூப் கெப்டன் விஜேசிங்க
தெரிவித்துள்ளார்.