நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகர் நிராகரிக்க முடியும் - உதய கம்மன்பில
தனக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை அடிப்படையற்றது எனக் கூறி அதனை ஏற்றுக்கொள்ளாது சபாநாயகரால் அதனை நிராகரிக்க முடியும் என அமைச்சர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள 10 குற்றச்சாட்டுக்களில் ஒன்றுக் கூட என்னுடன் சம்பந்தப்படவில்லை என்பதால், சபாநாயகரால் அதனை ஏற்காது நிராகரிக்க முடியும்.
எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தொழிநுட்ப கோளாறுகள் இருப்பதாக கூறி நிராகரிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது.
எனினும் இந்த யோசனை நிராகரிக்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம் அல்ல. அதனை எதிர்கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்.
வெற்றிகரமாக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள முடியும். இதன் மூலம் எனக்கு ஆதரவாக அரசாங்கத்தில் இருக்கும் நபர்களை அடையாளம் காண முடியும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.