சீன கப்பல் வருகையின் இரகசிய நோக்கம்! தீவிரமடையும் இந்தியாவின் கண்காணிப்பு
இந்தியப் பெருங்கடலில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரிவான கடற்படையின் நடவடிக்கைகளுக்கு தேவையான தரவுகளைச் சேகரிப்பதற்காகவே சீனாவின் யுவான் வாங்-5 கப்பல் இந்து சமுத்திரத்திற்குள் பிரவேசிக்கவுள்ளதாக இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்களுள் ஒருவருமான கேர்ணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டார்.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரிவான கடற்படையின் பலம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சீனா தனது ஆய்வுக் கப்பல்கள் மூலமாக இந்தியப் பெருங்கடலில் கடற்படை நடவடிக்கைகளுக்குத் தேவையான தரவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
கடந்த 2019 முதல் 2021ஆம் ஆண்டு ஜனவரி வரையில், இரண்டு சீன ஆய்வுக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் தீவிரமாக செயற்பட்டிருந்தன. அந்தமான் ரூ நிக்கோபார் தீவுகளுக்கு தெற்கே உள்ள ஈஸ்ட் றிட்ஜைச் சுற்றியுள்ள ஒரு பெரிய பகுதியை ஆய்வு செய்தன. 2021 நவம்பரில், சீனா ஆப்பிரிக்கக் கடற்கரையிலும் வடக்கு அரபிக்கடலிலும் ஆய்வுகளை நடத்தியுள்ளது.
அதேநேரம் 2019இல் சீனா தனது ஆய்வுக் கப்பலான சியாங் யாங் ஹாங்-6 ஐப் பயன்படுத்தி இந்தியப் பெருங்கடலில் குறைந்தது 12 தடவைகள் ட்ரோன்களை நிலைநிறுத்தி 12ஆயிரம் கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணங்களைச் செய்து தகவல்களைப் பெற்றுள்ளது.
குறிப்பாக, கடலின் பாதைகளை வரைபடமாக்குதல், கடலின் உப்புத்தன்மை, கொந்தளிப்பு, ஒட்சிசன் அளவு, போன்ற தரவுகளை சேகரிக்கப்படுகின்றன. இத்தகைய தரவுகள் வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களின் நகர்வுகளைக் கண்டறிந்து கண்காணிக்க உதவுவதுடன் தமது சொந்த நீர்மூழ்கிக் கப்பல்களின் பாதுகாப்பான பயணங்களுக்கும் உதவுவதாக உள்ளன.
சீனக்கப்பலும் கண்காணிப்பும்
இவ்வாறான நிலையில் தான் தற்போது சீனாவின் நவீன வகை ஆய்வுக் கப்பலான யுவான் வாங்-5 அம்பாந்தோட்டையில் ஒரு வாரத்திற்குத் தங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில், அதைச்சுற்றியுள்ள கடலை ஆய்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அக்கப்பல், மறைமுகமாக அரபிக்கடல், இந்தியாவின் மேற்குக் கடற்கரைகள் மற்றும் மாலைதீவுகள் மற்றும் இந்தியாவின் லாக்காடிவ் தீவுகளைச் சுற்றியுள்ள கடல்களில் ஆய்வுப் பணிகளைத் தொடரவுள்ளது. எனவே தான் இந்தியா தனது தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவலை கொண்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட அதிநவீன வான்வழிக் கண்காணிப்புத் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்தியக் கடற்படை இந்தியப் பெருங்கடலின் கடல்களை, குறிப்பாக மலாக்கா மற்றும் சுந்தா ஆகியவற்றின் மூலோபாய பகுதிகளை 24மணிநேரமும் கண்காணிப்பின் கீழ் வைத்திருக்கிறது.
சீனக் கப்பலாக இருந்தாலும் சரி அல்லது எந்தப் போர்க்கப்பலாக இருந்தாலும் சரி மலாக்கா மற்றும் சுந்தா ஜலசந்திக்கு ஊடாகவே இந்தியப் பெருங்கடலுக்குள் பிரவேசிக்க வேண்டும். எனவே சீனாவின் யுவான் வாங்-5 கப்பலாக இருக்கலாம் அல்லது போர்க்கப்பலாக இருக்கலாம் இந்துமா சமுத்திரத்தில் இந்தியாவின் கண்காணிப்பினைக் தவிர்த்து பிரவேசிக்க முடியாது என்றார்.