மனோ கணேசனின் கோரிக்கையின் பேரில் தமிழ் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள விஞ்ஞான கூடம்
கேகாலை மாவட்டத்தில் உள்ள தெஹியோவிற்ற தமிழ் மகா வித்தியாலயத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனின் கோரிக்கையின் பேரில், கனடா தமிழர் பேரவையின் நிதி பங்களிப்பிலும் விஞ்ஞானகூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட மனோ கணேசன் உரையாற்றுகையில்,
“இலங்கை அரசாங்கத்திடம் நிதி இல்லை. அது பற்றி ஒப்பாரி வைப்பதில் பயனும் இல்லை. நாளை அரசு மாறினாலும் சடுதியான மாற்றம் வரப் போவதும் இல்லை.
புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு
நிலைமை இயல்பு நிலைக்கு திரும்ப பல ஆண்டுகள் ஆகும். இந்நிலையில், ஏற்கனவே இந்நாட்டில் ஒடுக்கப்பட்டு, பாரபட்சமாக நடத்தப்படும் தமிழர்கள், மென்மேலும் துன்பத்தை எதிர் நோக்குகிறார்கள்.
இங்கேதான், உலகம் முழுக்க புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் அடைகிறது. எம்மில் பல தேவைப்பாடுகள் இருந்தாலும், பிரதான தேவைப்பாடு, கல்வி என சான்றோர் தீர்மானித்து விட்டார்கள்.
கல்விக்கு முதலிடம்
அதைத்தான் “கல்விக்கு முதலிடம்” என்கிறோம். கல்வி கிடைத்து விட்டால், ஏனைய எல்லா வளங்களும் வந்து சேர வேண்டிய இடத்தில் வந்து சேர்ந்து, பொருந்தி விடும்.
அதை கனேடிய தமிழர்கள் உணர்ந்து உள்ளார்கள். இலங்கை முழுக்க வாழும் தமிழ் மாணவர்களின் முன்பள்ளி கல்வி முதல், உயர்கல்வி வரை மிகப்பெரும் சவால்களை நமது இனம் எதிர்கொள்கிறது.
அவற்றை நாம், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உடன் பிறப்புகளின் பங்களிப்புடன் வெற்றிகரமாக சந்திப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.


