குண்டுகள் மீட்கப்படுவதற்கும் தேர்தலுக்கும் தொடர்பு உண்டா? மனுஷ நாணயக்கார கேள்வி
நாட்டில் பல இடங்களில் குண்டுகள், ஆயுதங்கள் மீட்கப்படுவதற்கும் மாகாணசபைத் தேர்தலுக்கும் தொடர்பு உண்டா என நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார்.
சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள காணொளியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
மாகாணசபைத் தேர்தல் நடாத்துவதற்கு அரசாங்கம் தயாராகின்றது என்பது எமக்கு புரிகின்றது. ஏனெனில் பல இடங்களில் குண்டுகள், ஆயுதங்கள் மீட்கப்படுகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய பொறிமுறைமை பற்றி பேசப்படுகின்றது.
தேசியப் பாதுகாப்பு குறித்து மீண்டும் பேசுவதற்கு தொடங்கியுள்ளனர். இந்தியாவின் அழுத்தம் காரணமாகவேனும் மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்பட உள்ளது.
இந்த அரசாங்கம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக ஆட்சிக்கு வந்தது. எனினும் பொதுமக்களுக்கு இதுவரையில் எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படவில்லை.
இந்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியதில் ஒரேயொரு தரப்பிற்கு மட்டுமே நிவாரணம் கிடைக்கப்பெற்றுள்ளது.
அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிவாரணங்கள் கிடைத்துள்ளது. அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஊழல் மோசடி வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றமையே அவர்களுக்கு கிடைக்கும் நிவாரணமாகும்.வேறும் எந்தவொரு நிவாரணமும் மக்களுக்கு கிடைக்கவில்லை என மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.