எரிபொருள் நிலையங்களில் குழப்பம்! மாவட்ட செயலக தலையீடே காரணம்: கு.கிருஷ்ணன்
பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து மாவட்ட செயலகம் தலையிட்டமையே எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பங்கள் ஏற்பட்டதற்கு காரணம் என யாழ்.மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் கு.கிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுகிழமை(3) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,‘‘யாழ்.மாவட்ட இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வருவாயை எதிர்நோக்கியே குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.
அதன் ஊடாக கிடைக்கின்ற வருமானதினை கொண்டு மக்களுக்கு நிவாரணம், மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை ஆற்றி வருகின்றோம்.
பின்னணி
எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இதுவரை காலமும் எந்த பிரச்சினையும் இல்லாமல் மக்களுக்கு எரிபொருளை விநியோகித்து வந்தோம்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாதுகாப்பு தரப்பினதும் கச்சேரியினதும் செயற்பாடுகளால் மக்களுக்கு உரிய முறையில் எரிபொருளை பகிர்ந்தளிக்க முடியவில்லை.
யாழ்.மாவட்ட செயலகத்தின் ஊடாக அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் என தெரிவிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் பெயர் பட்டியல் கையளிக்கப்பட்டு அதனை பகிர்ந்தளிக்க முற்பட்ட போதே பிரச்சினைகள் ஏற்பட்டது.
ஐந்து நாட்களுக்கு மேலாக காத்திருக்கின்ற மக்களை விட்டுவிட்டு உடனடியாக வந்து பெருந்தொகை எரிபொருளை கேட்டதாலேயே மக்களுக்கு எரிபொருளை உரிய முறையில் பகிர்ந்தளிக்க முடியவில்லை.
உண்மையில் செஞ்சிலுவை சங்கம் என்ற அடிப்படையில் மக்களுக்கு சேவை செய்வதே எங்கள் நோக்கமாகும். அதனையே நாங்கள் தொடர்ந்தும் செய்வோம். எதிர்காலத்திலும் அவ்வாறு தான் செயற்படுவோம்.
முடிவு
அடுத்த முறை பெட்ரோல் வருமாக இருந்தால் நாங்கள் நிச்சயமாக பொதுமக்களுக்கு தான் வழங்க முடிவு செய்திருக்கின்றோம். இந்த முடிவையே நிர்வாகக்குழுவும் எடுத்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.